

உள்படம்: ந.செல்வகுமார்
திருச்சி: டிட்வா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ந.செல்வகுமார் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: டிட்வா புயல் இன்று (டிச. 1) சென்னைக்கு அருகில் வடக்கு நோக்கி நகர்ந்து பழவேற்காடு வரை செல்லும். இரவு ‘யூ டர்ன்’ எடுத்து சென்னைக்கு கிழக்கே நகர்ந்து, வரும் 3-ம் தேதி வட கடலோர மாவட்டங்களுக்கு அப்பால் நகர்ந்து 4, 5-ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் நோக்கிப் பயணிக்கும். அப்போது, காற்று சுழற்சியாக செயலிழந்து டெல்டா, தென் மாவட்டங்கள் ஊடாக அரபிக்கடலை நோக்கி நகரும்.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று காலை முதல் நாளை இரவு வரை மிதமான மற்றும் சற்று கனமழை பெய்யும். குறிப்பாக, கடலோரப் பகுதிகளில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வட உள் மாவட்டங்களில்.. அதேநேரத்தில், வட உள் மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை பெய்யும். எனவே, இன்றும், நாளையும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.