

சென்னை: பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2-வது வாரத்தில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க திட்டமிட்டிருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
போரூர் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இன்று (ஜன.11) சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது. இந்த வழித்தடத்தில் ஏற்கெனவே ரயில் என்ஜின் மூலம் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று முழு மெட்ரோ ரயிலையும் இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், சோதனை ஓட்டம் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களை உறுதிப்படுத்தும் வகையில் நடைபெற்றது.
இதனையடுத்து, பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2-வது வாரத்தில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க திட்டமிட்டிருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழித்தடத்தில் போக்குவரத்து தொடங்கினால் 25 நிமிடங்களில் பூந்தமல்லி பைபாஸில் இருந்து வடபழனி சென்றடையலாம் என்றும், 7 நிமிடத்தில் ஒரு ரயில் என்ற வீதத்தில் சேவை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
பின்னர், சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் சித்திக் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "போரூர்-வடபழனி இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. பூந்தமல்லி - வடபழனி இடையே வரும் பிப்ரவரி இரண்டாம் வாரம் பயணிகள் ரயில் சேவையை தொடங்க திட்டமிட்டிருக்கிரோம்.
பின்னர் ஜூன் மாதத்தில் கோடம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும். முதற்கட்டமாக ஓட்டுநருடன் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும். பின்னர் ஜூன் மாதத்துக்கு பிறகு ஓட்டுநர் இன்றி மெட்ரோ ரயில் சேவை இயக்க திட்டமிட்டிருக்கிறோம். பூந்தமல்லியில் இருந்து வடபழனிக்கு 25 நிமிடங்களில் செல்லலாம்" என்று அவர் கூறினார்.