

கோவில்பட்டி: சாகித்ய விருது பெற்ற கரிசல் எழுத்தாளர் பூமணியின் உடல், கோவில்பட்டி அருகே ஆண்டிப்பட்டியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி கடந்த 12-ம் தேதி சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. கரிசல் இலக்கியத்தின் தலைமை செயலகமாக விளங்கும் கோவில்பட்டி மண்ணில் பிறந்த பூமணி, இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டவர். இவர் எழுதிய வெக்கை, பிறகு, வாய்க்கால் வரப்புகள், அஞ்ஞாடி போன்ற நாவல்கள் புகழ்பெற்றவை. பல்வேறு சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
இவரது ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக 2014-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. பூமணி எழுதிய வெக்கை நாவல் 1982-ல் வெளியானது. இந்த நாவல்தான் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படமாக வெளியானது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பூமணியின் உடல் நேற்று முன்தினம் ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி பாரதி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று காலை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.கீதாஜீவன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜீ.வி.மார்க்கண்டேயன், கா.கருணாநிதி, திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் ஏராளமான எழுத்தாளர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பிற்பகல் 2 மணிக்கு அவரது உடல் சொந்த ஊரான கோவில்பட்டி அருகே ஆண்டிப்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பூமணிக்கு சொந்தமான நிலத்தில் இறுதி நிகழ்ச்சிகள் நடந்தன. அரசு சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா, மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கா.கருணாநிதி, ரெட்டியார்பட்டி நாராயணன் (நாங்குநேரி) ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து எழுத்தாளர் பூமணியின் உடலுக்கு அரசு சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான 10 காவலர்கள், வானத்தை நோக்கி 3 சுற்றுக்களாக 30 குண்டுகள் முழங்கச் செய்து, அரசு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில், தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், அதிமுக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை மற்றும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.