

புதுடெல்லி: நடப்பு கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ அமல்படுத்தியுள்ள புதிய மும்மொழிக் கொள்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த அரசாணைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விரிவான விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஆனந்த் குரோவர், கோபால் சங்கரநாராயணன், ஷியாம் திவான் மற்றும் முகுல் ரோஹத்கி ஆகியோர், புதிய கொள்கையின்படி 9-ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு இந்திய மொழிகளைக் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்றும், இதனால் அவர்கள் 5-ஆம் வகுப்பு முதல் படித்து வந்த வெளிநாட்டு மொழிகளையோ அல்லது ஆங்கிலத்தையோ கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் வாதிட்டனர்.
மேலும், ஆங்கிலம் 300 ஆண்டுகள் பழமையான மொழியாக இருந்தபோதிலும், இக்கொள்கையில் அது அயல்நாட்டு மொழியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினர்.
இடைக்காலத் தடை கோரி மனுதாரர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களில், "சிபிஎஸ்இ-க்கு இத்தகைய கல்வி விதிகளை உருவாக்கச் சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை, என்சிஇஆர்டி அமைப்புக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது. டெல்லி போன்ற இடங்களில் உள்ள பள்ளிகளில் திடீரென தமிழ் அல்லது பஞ்சாபி மொழியைக் கற்கச் சொன்னால், அதற்குரிய ஆசிரியர்களோ அல்லது பாடப்புத்தகங்களோ எங்கு கிடைக்கும்? என்சிஇஆர்டி இணையதளத்தில் தற்போது வெறும் 3 புத்தகங்கள் மட்டுமே உள்ளன. இதனால் தற்போதைய ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயமும், மாணவர்களின் மனநலன் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது" என்று வாதிடப்பட்டது.
ஆனால், இதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், “புதிய மொழியைக் கற்றுக்கொள்வது ஒருபோதும் வீணாகாது. ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டால் அவர்களை மீண்டும் பணியமர்த்த எங்களால் உத்தரவிட முடியும்” என்று குறிப்பிட்டார். மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதி பதிலளிக்க அவகாசம் கோரியதை தொடர்ந்து, 10 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், விரிவான விசாரணையை அடுத்த புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது.