

புதுடெல்லி / சென்னை: டெல்லியில் பிரதமர் மோடியும் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பொங்கல் விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர்.
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பொங்கல் விழாவை கொண்டாடி வருகிறார்.
இந்த ஆண்டு ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற கருப்பொருளில் பொங்கல் விழா அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: விவசாயிகளின் கடின உழைப்பை கொண்டாடும் வகையிலும், வேளாண் பொருட்கள் விளைவதற்கு முக்கியமான நிலம், சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
நன்றி என்பது வெறும் வார்த்தையையும் தாண்டிநமது அன்றாட வாழ்வில் இருக்க வேண்டும் என்பதை நினைவுப்படுத்தும் வகையில் பொங்கல் பண்டிகைஉள்ளது. இந்த நிலம் நமக்கு ஏராளமானவற்றை தரும் போது, அதை மேம்படுத்துவதும் பாதுகாப்பதும் நமது பொறுப்பு.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கலாச்சாரத்தை உற்சாகத்துடன் வளர்த்து வருகின்றனர். அவர்களில் ஒருவராக நான் இருப்பதில் பெருமை அடைகிறேன். உலகின் மிக மிகப் பழமையானது தமிழ் கலாச்சாரம். இந்தக் கலாச்சாரம் எதிர்காலத்துக்கு வழிகாட்டியாக, பல நூற்றாண்டுகளின் ஞானத்தையும் பாரம்பரியத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த பொங்கல் நாளில் நம்பிக்கை, ஒற்றுமை ஆகியவை இந்தியாவை இன்னும் முன்னேற்றத்துக்கு கொண்டு செல்லும் என்ற உணர்வு மேலோங்குகிறது.
இயற்கை, குடும்பம், சமூகம் ஆகியவற்றை சமநிலையுடன் வைத்துக்கொள்வதற்கான முக்கியத்துவத்தை இந்தப் பொங்கல் பண்டிகை வலியுறுத்துகிறது. நிலத்தின் வளம், தண்ணீர் சேமிப்பு, எதிர்கால சந்ததியினருக்காக இயற்கை வளங்களை அறிவுப்பூர்வமாக பயன்படுத்துவது அவசியம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
மேலும், தமிழ், ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அன்பான எனதருமை குடிமக்களே, வணக்கம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பொங்கல் பண்டிகை மனித உழைப்புக்கும், இயற்கைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை நினைவூட்டுகிறது. இந்த பண்டிகை வேளாண்மை, கடினமாக உழைக்கும் விவசாயிகள், கிராம வாழ்க்கை, வேலையில் கவுரவம் ஆகியவற்றுடன் ஆழ்ந்த தொடர்பு கொண்டது.
உலகின் மிகப் பழமை வாய்ந்த மொழியான தமிழ் எங்கள் நாட்டில் உள்ளது என்ற பெருமை நமக்குண்டு. அதேபோல் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகை இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், உலகம் முழுவதற்குமானதாக பரவியுள்ளது. இந்த பண்டிகை உங்கள் வாழ்வில் வளம், வெற்றி, நல்ல உடல்நலத்தை ஒவ்வொருவருக்கும் வழங்கட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கடிதத்தில் கூறியுள்ளார்.
முதல்வர் கொண்டாட்டம்: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமத்துவப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினார். நிகழ்ச்சியில் பானையில் பொங்கல்வைத்து, தலைமைச் செயலக அலுவலர்களுடன் அவர் பொங்கல் விழா கொண்டாடினார். பின்னர் நடைபெற்ற நாகஸ்வர இசை நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் கேட்டு ரசித்ததுடன், தலைமைச்செயலர், துறைச் செயலர்கள், துறைத் தலைவர்கள், அரசு உயரதிகாரிகள், தலைமைச் செயலக அலுவலர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.
அதன்பின் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகம் முழுவதும் நாம் சமத்துவப் பொங்கலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். “எல்லோர்க்கும் எல்லாம்” என்ற இலக்கை நோக்கி, சமத்துவ நிலையை அனைவரும் அடையும் நோக்கத்தோடு, நமது அரசு பணியாற்றிக் கொண்டிருக்கிறது; இன்னும் சொல்லப் போனால் உழைத்துக் கொண்டிருக்கிறது. உழைத்துக்கொண்டிருப்பவர்கள் என்றால் நாங்கள் மட்டுமல்ல, நீங்களும் சேர்ந்துதான் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
தமிழக மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தலைமைச் செயலகத்தில் நீங்கள் எல்லோரும் நேரம், காலம் பார்க்காமல், உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்களோடு, இந்த பொங்கலை கொண்டாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மகிழ்ச்சி, உங்கள் உள்ளங்களிலும், உங்களுடைய இல்லங்களிலும், பொங்கட்டும்! பொங்கட்டும்! உங்கள் அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறன். இவ்வாறு முதல்வர் பேசினார்.