

சென்னை: ‘பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரும் சீரோடும், சிறப்போடும் வாழ வேண்டும்’ என அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: தை பிறந்தாள் வழி பிறக்கும் என தன்னம்பிக்கை தரும் தைத் திருநாளில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மதவாத, சாதி வெறி, சமூக விரோத பிற்போக்கு சக்திகளை முற்றாக நிராகரித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கருத்துகளுக்கு வலுவூட்டி மகத்தான வெற்றிபெற உறுதி ஏற்போம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, வாழ்வில் முன்னேற வாழ்த்துகள். தமிழகத்தில் போதைப்பொருட்கள் இல்லாமல் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் அனைவருக்கும் அச்சமில்லாத பாதுகாப்பான வாழ்க்கை அமைய தைத் திருநாள் பிறக்கட்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: திருவள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப, உலகத் தொழில் அனைத்துக்கும் அச்சாணியாகத் திகழும் உழவுத் தொழிலையும், அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் உழவர் பெருமக்களின் நலனையும் பேணிக் காத்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற் போம்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: தித்திக்கும் செங்கரும்புடன் சின்னஞ்சிறார் சிரிப்பொலியும், புத்தாடை தான் உடுத்தி புதுப்பொலிவு காட்டிடும் இளம் வஞ்சியர் வளையொலியும் தெருவெங்கும் எதிரொலிக்க, உலகெங்கும் பரவி வாழும் தமிழ்ச்சொந்தங்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள். தைத்திங்கள் முதல் நாளாம், தமிழ்ப்புத்தாண்டில் பொங்கட்டும் புரட்சிகரமான தமிழ்ப்பொங்கல்.
வி.கே.சசிகலா: தமிழரின் தன்மானம் தனித் தன்மையோடு திகழ, தமிழர்தம் வாழ்வில் வளம் பெற்றிட, மக்களாட்சி மலர, தமிழர் திருநாளாம் தைத் திருநாள் வழிவகுக்க வேண்டும் என்று தெரிவித்து, உங்கள் அனைவரது இல்லங்களிலும் அன்பும், அமைதியும், செல்வமும், மகிழ்வும் பால்போல் பொங்கி வழிய வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் சமூக நல அமைப்புகளும் வாழ்த்து தெரிவித்துள்ளன.