

‘கழகத்தின்’ பெயரில் புதுக் கட்சி தொடங்கியிருக்கும் தலைவர் அண்மையில் அறிவாலய தலைவரைச் சந்தித்துப் பேசினார். இவரை ஆலயத்துக்கு அழைத்து வந்தவர் ஹனிபீ மாவட்டத்தின் டெல்லி ’கோல்டு’ புள்ளியாம். பசைக்கு பஞ்சமில்லாத ‘கழகக்’ கட்சி தலைவர், ஹனிபீ மாவட்டத்தில் உள்ள தனது சொந்தத் தொகுதியை தனக்கு தரவேண்டும் என ’கோல்டு’ புள்ளியிடம் முதல் கோரிக்கை வைத்தாராம்.
“அதெல்லாம் பிரச்சினை இல்லை... ஆனால், மாவட்டத்தில் உள்ள மற்ற 3 தொகுதிகளுக்கும் தலா ‘10 சி’ வீதம் தேர்தல் செலவுக்கான பணத்தைத் தந்துவிட வேண்டும்” என்று சொன்னாராம் மிஸ்டர் ‘கோல்டு’. அதற்கு சம்மதித்துத் தான் ‘கழகக்’ கட்சி தலைவர் சென்னைக்கு வண்டி ஏறினாராம்.
ஆனால், கூட்டணிக்கு ஆதரவை தெரிவிக்க வந்திருப்பதாகச் சொல்லி அவரை ஆலயக் கட்சி தலைவருடன் கைகுலுக்க வைத்த மிஸ்டர் ‘கோல்டு’, அதன் பிறகு தான் சீட் விஷயத்தை தலைவரிடம் சொன்னாராம். இதைக் கேட்டு சூடான ஆலயக் கட்சி தலைவர், “சீட்டெல்லாம் வாய்ப்பில்லை; இதயத்தில் வேண்டுமானால் இடம் தரலாம்” என்று சொல்லி கைகூப்பி வழியனுப்பி விட்டாராம்.
இதனால் இப்போது, ‘அவசரப்பட்டுக் கிளம்பிட்டோமோ’ என அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ‘கழகக்’ கட்சி தலைவர், பனையூர் பக்கம் போய்ப் பார்ப்பது அல்லது தனது தொகுதியில் யார் தயவும் இன்றி தனித்தே களமிறங்கி பணத்தால் ‘விளையாடிப்’ பார்ப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.