

தென்கோடி மாவட்டத்தில் இருக்கும் தொகுதிகளில் பெருவாரியான தொகுதிகள் இம்முறையும் கதர்களுக்கே ‘கை’கொடுக்கும் விதமாக இருக்கிறதாம்.
இருந்தாலும் கடலுக்குள் சிலை இருக்கும் தொகுதி மட்டும் இம்முறையும் இலைக் கட்சிக்கு இன்முகம் காட்டுகிறதாம். இந்தத் தொகுதியின் இப்போதைய சிட்டிங் ‘சுந்தரப்’ புள்ளி, ஏற்கெனவே, ‘காவிப் பேரணி’க்கு கொடியசைக்கப் போய் கஷ்டத்தில் மாட்டிக் கொண்டவர். இதனால் எடக்கானவரின் கோபத்துக்கு ஆளாகி, கட்சி பதவியையும் இழக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்.
அதன் பிறகு, காவிகளின் சிபாரிசிலேயே மீண்டும் அவரை மன்னித்து ஏற்றுக் கொண்டது கட்சி. இந்த நிலையில், என்னதான் தலைக்கு மை தடவி இளமையாகக் காட்டிக் கொள்ள நினைத்தாலும் ‘சுந்தரப்’ புள்ளியால் முன்பு போல் ஓட நடக்க முடியவில்லையாம். அதனால், தனக்குப் பதிலாக தனது மகளை இம்முறை தனது தொகுதியில் நிறுத்திவிடலாமா என யோசிக்கிறாராம்.
தலைநகரில் மருத்துவராக இருக்கும் அவரின் ‘அரசி’ மகள், அண்மைக்காலமாக தொகுதிக்குள் அப்பா கலந்து கொள்ளும் கட்சி நிகழ்ச்சிகளில் எல்லாம் கூடவே வந்து தலைகாட்டி வருகிறார். இதனிடையே வைகுண்ட ஏகாதசி அன்று, எடக்கானவர் மீண்டும் முதலமைச்சராக வேண்டி ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சிறப்புப் பூஜை எல்லாம் செய்து பிரசாதத்தை சென்னைக்கே எடுத்து வந்து கொடுத்தாராம் ‘சுந்தரப்’ புள்ளி. எல்லாமே ஒரு தொலைநோக்குக் கணக்குத் தான்.