

கழகத்தின் பெயரில் தமிழை வைத்துக் கொண்டு வேற்று மாநிலத்தவர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக ஏற்கெனவே விசில் பார்ட்டிக்கு எதிராக பலரும் பொறுமிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், இன்னொரு நியமன விவகாரமும் இப்போது வில்லங்கப் பேச்சாகி இருக்கிறது. அரசுத் துறைகளின் வளர்ச்சிக்கு வழிகாட்டுதல் வழங்கவும், மாண்புமிகு மக்களுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கவும் சிறப்புப் பணி அதிகாரிகள் (ஓஎஸ்டி) நியமிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்.
பெரும்பாலும் இந்த பொறுப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்கள், நிபுணர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள்தான் நியமனம் செய்யப்படுவார்கள். ஆனால், விசில் நிர்வாகத்தில், இத்தகைய நியமனங்கள் அதிகாரிகள் மத்தியில் தொடர் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன.
ஏற்கெனவே முதன்மையானவருக்கு ஆலோசனைகள் வழங்க கிரானைட் அதிபர் ஒருவரை நியமித்திருக்கிறார்கள். அவருக்கும், அவரது ஆந்திரா மச்சானுக்கும் உறவினரான இன்னொரு தெலுங்கு தேசத்துக்காரரை ‘வளங்கள்’ துறை மாண்புமிகுவுக்கு ‘வளமான’ ஆலோசனைகள் வழங்கும் ராஜகுருவாக நியமனம் செய்ய வேலைகள் நடக்கிறதாம்.