

தலைமுறை தலைமுறையாக சூரியக் குடும்பத்துக்கு நெருக்கமாக இருக்கும் ‘அன்பான’ வாரிசுப் பிள்ளையை அண்மைக் காலமாக சின்னவருடன் சேர்ந்து பார்க்க முடியவில்லை என்கிறார்கள். விசில் பார்ட்டி பிடித்து உலுக்கி வரும் பார்ட்டி ஃபண்ட் விவகாரத்தில் ‘அன்பான’ வாரிசுப் பிள்ளை மீது சூரியக் குடும்பத்துக்கு சொல்ல முடியாத வருத்தமாம். படிப்புத் துறையில் வாரிசுப் பிள்ளையை ஆதாரமாக வைத்து பல பேர் இஷ்டத்துக்கு ‘வாழ்ந்திருக்கிறார்’ களாம்.
குறிப்பாக, அவருக்கு உதவியாளர் என்று சொல்லிக் கொண்டு உலா வந்த பிரபல ஐஸ் க்ரீம் கம்பெனியின் பெயர் கொண்டவர் வாரிசுத் தம்பிக்கே தெரியாமல் பல வழிகளிலும் ‘வளம் கொழித்து’ விட்டாராம். இந்த விஷயம் கொஞ்சம் லேட்டாகவே வாரிசுத் தம்பியின் மனையாளுக்குத் தெரிய வந்ததாம். “இப்படி எல்லாம் செய்ய முடியுமா?” என்று வியந்து போனவர், “இனிமேல் எதுவாக இருந்தாலும் நானே பார்த்துக்குறேன்” என்று சொல்லி மிஸ்டர் ‘ஐஸ் க்ரீமை’ மியூட் பண்ணிவிட்டாராம்.
அதன் பிறகு பல விஷயங்களில் அவரே ‘வரவு செலவுகளை’ கவனிக்க ஆரம்பித்துவிட்டாராம். வாரிசுத் தம்பியின் துறையில் நடந்ததாகச் சொல்லப்படும் ‘கலெக் ஷன் கரப்ஷன்’ தொடர்பாக கைது செய்யப்பட்ட ‘கிங்’ குமாரர் போலீஸ் விசாரணையில் பல உண்மைகளை போட்டுக் கொடுத்துவிட்டுத்தான் உள்ளே உட்கார்ந்திருக்கிறாராம். அதனடிப்படையில் மேல் விசாரணை தொடர்ந்தால் வாரிசுத் தம்பியின் தலையை அநியாயத்துக்கு உருட்டிவிடுவார்களாம்.
இதெல்லாம் தெரிந்தே அவரைக் கொஞ்சம் தள்ளி வைத்திருக்கிறதாம் தலைமைக் குடும்பம். அதேசமயம், வாரிசுத் தம்பி இப்படி ஒதுங்கி இருப்பதையும் இந்த வழக்கில் போலீஸ் அடுத்தகட்டத்துக்கு நகராமல் இருப்பதையும் முடித்துப் போட்டுப் பேசுபவர்கள், “ஒருவேளை, இவரும் விசில் பார்ட்டி வாஷிங் மெஷினுக்குள்ள போகப் போறாரோ என்னவோ” என்று சந்தேகம் கிளப்புகிறார்கள்