

ஆரம்பத்தில் இருந்தே சூரியக் கட்சி மீது கொஞ்சம் சாஃப்ட் கார்னரில் இருக்கும் கதர் கட்சியின் அந்த வாரிசு எம்பி-யானவர், தனது சீமை தொகுதியில் இரண்டு இடங்களில் கலையரங்கம் கட்ட தனது தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கி இருந்தாராம்.
ஆனால், ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்த கணக்காய், இவர் ஒதுக்கிய நிதியில் கலையரங்கத்தை கலர்ஃபுல்லாக கட்டி முடித்த அதிகாரிகள், அதற்கு விசில் பார்ட்டியின் கொடி கலரில் வர்ணம் பூசிவிட்டார்களாம். கலையரங்கங்களை ரிப்பன் வெட்டி திறக்கப் போன வாரிசு எம்பி, இதைப் பார்த்துவிட்டு ஜிவ்வானாராம்.
உடனே பக்கத்தில் நின்ற பிடிஓ-வை கூப்பிட்டு, “ஏங்க... கலையரங்கத்துக்கு நிதி ஒதுக்குனது நானு. நீங்க அவங்க கட்சிக் கலரை அடிச்சு வெச்சிருக்கீங்க. நீங்க ஜால்ரா தட்டுறதுக்கு நானாங்க ஆளு. எனக்கு இந்த அரசாங்கத்தோட விரோதமெல்லாம் கிடையாது. ஆனா, மக்களுக்கு தவறான தகவலைக் குடுக்காதீங்க. மொதல்ல இந்த கலர மாத்தி வெள்ளைப் பெயின்ட அடிங்க” என்று கண்டிப்பாகச் சொன்னாராம்.
அத்தோடு விடாமல் சொந்தக் கட்சி சிங்கங்களையும் கூப்பிட்டு ரவுண்டு விட்டவர், “நீங்களெல்லாம் என்னய்யா பண்றீங்க... எம்பி ஃபண்டுல வேலை நடக்குது. என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு பாக்க மாட்டீங்களா... இப்பப் பாருங்க, அவங்க கட்சிக் கலர அடிச்சு வெச்சிருக்காங்க” என்று எகிறிவிட்டு காரில் ஏறினாராம்.