

‘மகிழ்ச்சி’ மாண்புமிகுதான் விசில் ஆட்சியில் முக்கிய பவர் சென்டராக இருக்கிறார். ஆனால், அவரது பெயரைச் சொல்லிக் கொண்டு பல மாவட்டங்களில் சிஷ்ய கோடிகள் ‘வாரிக் குவிப்பதாக’ முதன்மையானவரின் முதன்மை அட்வைஸருக்கு தகவல்கள் வந்ததாம். இதையடுத்து அவர், ‘மகிழ்ச்சியின்’ அசைவுகளைக் கண்காணிக்க ‘மாப்பிள்ளை’ மாண்புமிகுவுக்கு சிக்னல் கொடுத்தாராம்.
அதன்படியே, ‘மகிழ்ச்சி’யின் நகர்வுகள் குறித்து தனது பரிவாரங்கள் மூலம் பக்காவாய் லிஸ்ட் எடுத்து அறிக்கை சமர்ப்பித்தாராம் மிஸ்டர் ‘மாப்பிள்ளை’. இதைக் கேள்விப்பட்டு, “எனக்கே ஸ்பை போடுற அளவுக்கு வந்துட்டாங்களா?” என்று கொந்தளித்த மிஸ்டர் ‘மகிழ்ச்சி’, அதற்குப் பிறகு ‘மாப்பிள்ளை’ உடனான தொடர்புகளை குறைத்துக் கொண்டாராம்.
இதையடுத்து, சென்னைக்குள் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் ‘மாப்பிள்ளை’ மாண்புமிகுவுக்கு முக்கியத்துவம் இல்லாத அளவுக்கு பார்த்துக் கொள்ளப்படுகிறதாம். இதில் வேடிக்கை என்னவென்றால், ‘மகிழ்ச்சியை’ உளவு பார்க்கச் சொன்ன அட்வைஸரும் இப்போது அந்தப் பக்கம் சாய்ந்து கொண்டு சேம் சைடு கோல் போடுகிறாராம்.
இதையடுத்து, ‘மகிழ்ச்சி’ சிபாரிசில் மாண்புமிகு இருக்கையைப் பிடித்தவர்கள் சம்பந்தப்பட்ட நெகட்டீவ் சமாச்சாரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் வேலையில் ஒரு படையே களத்தில் இறங்கி வேலை செய்கிறதாம்.
நவம்பர் அல்லது டிசம்பரில் அமைச்சரவையை மாற்றி அமைக்கும் திட்டத்தில் முதன்மையானவர் இருக்கிறாராம். அவரது ஹிட் லிஸ்ட்டில் இருக்கும் நான்கு அமைச்சர்களில் மூன்று பேர் மிஸ்டர் ‘மகிழ்ச்சியால்’ பதவிக்கு வந்தவர்களாம்.