

‘அவார்டு நகர்’ மாவட்டத்தில் ஜூனியர்களான இரண்டு அம்மணிகளுக்கு அமைச்சரவையில் வாய்ப்புக் கொடுத்த விசில் மேலிடம், ‘மன்றம்’ காலத்திலிருந்தே தொட்டுத் தொடரும் ‘வெல்த்தான’ மாவட்டப் புள்ளியைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாம். இதனால் ஓர் அம்மணி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக அவர் புறக்கணித்து வருகிறார். “நீங்கள் ஏன் அமைச்சர் நிகழ்ச்சிக்கு வரவில்லை?” என்று யாராவது கேட்டால், “வாக்காளர்களுக்கு நன்றி சொல்லப் போயிருந்தேன்” என கூலாக பொய் சொல்கிறாராம்.
அதேசமயம், எப்படியாவது இவரை அமைச்சராக்கி நாமும் நாலு பேரைப் போல் ஆளாய் பேராய் ‘வளர்ந்து’ விட வேண்டும் எனத் துடிக்கும் ‘வெல்த்தின்’ விசுவாசிகள் சிலர், அமைச்சர் அம்மணிகளுக்கு அதிர்வேட்டு வைக்கும் விஷயங்களை சமயம் பார்த்து பப்ளிக்படுத்தி வருகிறார்களாம்.
ஏற்கெனவே ‘ரீல்ஸ் புகழ்’ மந்திரிக்கு எதிராக சர்ச்சைகள் வெடித்த போதே, ‘அடுத்து நமக்குத் தான்’ என்று ஆர்ப்பாட்டம் காட்டினார்களாம். அது நடக்கவில்லை என்றதும் தற்போது ‘ஜட்டி மிரட்டல்’ மந்திரியின் பெயர் கெட்டு வருவதால் அந்த இடமாவது அண்ணனுக்குக் கிடைக்குமா என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.