

‘புரம்’ மாவட்டத்தில் இலைக் கட்சியின் ‘புரட்சி மாண்புமிகுவாக’ இருந்த ‘முகம்’ தலைவர் அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதையாக நிற்கிறாராம். விசில் பார்ட்டி தன்னை தூக்கி வைத்துக் கொண்டாடும் என நினைத்து தனிப்படை திரட்டினார்.
ஆனால், அந்த மாவட்டத்தில் இருக்கும் விசில் பொறுப்பாளர்களோ, “இவர உள்ள விட்டீங்கன்னா எங்களையும் ‘கிர்ருன்னு’ சுத்தவிட்டுருவாரு பாத்துக்கோங்க” என்று அலாரம் அடிக்கிறார்களாம். இந்த மாவட்டமானது விசில் பார்ட்டியின் ‘மகிழ்ச்சி’ மந்திரி அரசாட்சி செய்யும் மாவட்டம் வேறு. இதனால் பார்ட்டி தலைமை இவரது என்ட்ரிக்கு இன்னமும் என்ஓசி கொடுக்காமல் இழுக்கிறதாம்.
இதனிடையே, ‘முகம்’ தலைவருக்கும் ராதையின் நாயகருமான அவரது அண்ணனுக்கும் ‘பிளான் பி’ முகவரான ‘சக்தியான’ இலைக் கட்சி பொறுப்பாளர் அண்மையில் விசில் கட்சியில் சேர்ந்துவிட்டார். சேர்ந்ததோடு மட்டுமல்லாது, ‘முகம்’ தலைவருக்கு பிடிக்காத எதிர் முகாமைச் சேர்ந்த இலைக் கட்சியின் ‘கண்ணான’ ஃபைனான்ஸ் பிரமுகருடன் அதி நெருக்கமாக இருக்கிறாராம்.
இதனால் “இந்தாளு எதுக்கு அங்க போய் ஒட்டுறான்” எனக் குழம்பிப் போன ‘முகம்’ தலைவரும் அவரது அண்ணனும், மாவட்டத்துக்கு வெளியில் ‘சக்தியானவர்’ பெயரில் வாங்கிப் போட்டிருந்த இரண்டு சொத்துகளை தங்களுக்கு வேண்டியவர்கள் பெயரில் மாற்றிவிட்டார்களாம்.
இதேபோல் இன்னும் சில பினாமி சொத்துகளையும் நிதி ஆதாரங்களையும் நைஸாகப் பேசி கைப்பற்றும் நோக்கில் ‘சக்தியானவரை’ அழைத்தார்களாம். ஆனால் அவரோ, அந்தா இந்தா என்று இழுக்கிறாராம். இதனால் அண்ணனும் தம்பியும் கலவரப்பட்டுக் கிடக்கிறார்களாம். இதையடுத்து, பிராப்பர்ட்டிகள் கைக்கு வராவிட்டால் ‘கவனிக்க’ வேண்டிய விதத்தில் கவனித்து அவற்றைக் கைப்பற்றவும் தயாராகிறதாம் ‘முகம்’ தலைவர் முகாம்.