

‘விளைச்சல்’ மாண்புமிகு களத்தில் நிற்கும் ‘குறிஞ்சி’ தொகுதியில் இம்முறை களம் ரொம்பவே இழுபறியாம். “என்னை தலையெடுக்க விடாமல் தடைபோட்டவர் இவர் தான்” என கர்ஜித்து கூட்டணிக்கே குட்பை சொன்ன ‘உரிமைக்’ கட்சி தலைவர் ‘குறிஞ்சி’ தொகுதியில் ’கண்ணான’ தனது உடன்பிறப்பை களத்தில் நிறுத்தினார்.
இலை மற்றும் சூரியனுக்கு போட்டியாக இவருக்காகவும் பல இடங்களில் ஓட்டுக்கு 500 ரூபாய் பட்டுவாடா களைகட்டியது பலரையும் வியக்க வைத்தது.
போதாக்குறைக்கு, தன்னைச் சீண்டும் விதமாக ‘விளைச்சல்’ மாண்புமிகு விட்ட விமர்சனங்களால் வெடித்துக் கொண்டிருந்த ‘மாம்பழக் கட்சி மைந்தரும்’, “வெச்சேனா தீர்த்தேனா பார்... என்ன செய்வீங்களோ தெரியாது இந்த தடவ அந்தாளு ஜெயிக்கக் கூடாது” என தனது கட்சியினரை கொம்பு சீவிவிட்டாராம்.
இதனால் முதலில், ஆயிரம் கொடுத்தால் போதும் என ‘பட்ஜெட்’ போட்டு வைத்திருந்த ‘விளைச்சல்’ மாண்புமிகு கடைசி நேரத்தில் பல இடங்களில் மூவாயிரம் வரைக்கும் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிப் போனாராம். ஆனாலும், ‘விளைச்சல் வீடு வந்து சேர்ந்துருமா’ என சந்தேகப் பதற்றம் விலகாமலேயே இருக்கிறார்கள் ‘விளைச்சல்’ மாண்புமிகுவின் விசுவாச வட்டத்தினர்.