

“இந்த ஒரே ஒரு முறை என்னைய ஜெயிக்க வெச்சுருங்க... நான் இந்திய சாதனை படைச்சுருவேன்” என்று தேர்தல் களத்தில் கெஞ்சிக் கூத்தாடிய ‘ஜெயில்’ மாவட்டத்தின் ‘பாடி’ தொகுதி சீனியர் மாண்புமிகு, கடந்த முறையே மூன்று இலக்க வித்தியாசத்தில் தான் நூலிழையில் தொகுதியை தக்கவைத்தார்.
அந்த பயத்தில் இந்த முறை வாக்காளப் பெருமக்களுக்கு ரொம்பவே ‘தாராளம்’ காட்டி இருக்கிறார். இதற்கு முந்தைய தேர்தலில் 200, 300 ரூபாய் அளவுக்கே பட்டுவாடா செய்து பழகி இருந்த சீனியர், இம்முறை ஒரு ஓட்டுக்கு 2 ஆயிரம் கொடுத்து தொகுதி மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம். அப்படியும் சில இடங்களில் இருந்து, “எங்களுக்கு இன்னும் வரலையே” என ‘சர்வீஸ் கால்கள்’ வந்ததாம்.
அதற்காக ‘பட்டுவாடா’ பொறுப்பாளர்களைக் கூப்பிட்டு பம்படிக்காமல் உடனடியாக அந்த ஸ்பாட்டுக்கு விரைந்த சீனியரின் ‘கதிரான’ வாரிசு, தனது கையில் இருந்த பணத்தை அந்த இடத்திலேயே எடுத்துக் கொடுத்து சமாளித்தாராம். இது மாத்திரமல்லாது சமுதாய தலைவர்கள், ஊர் தலைவர்கள் என பல தரப்பையும் இம்முறை தனித்தனியாக அழைத்துப் பேசிய அப்பாவும் பிள்ளையும், அவர்களுக்கெல்லாம் என்ன ‘மரியாதை’ செய்ய வேண்டுமோ அதையும் ’மதிப்பாக’ செய்து அனுப்பினார்களாம்.
இந்த ‘சேவைகளை’ எல்லாம் பட்டியல் போடும் சீனியர் மாண்புமிகுவின் விசுவாச வட்டத்தினர், “இம்முறை அண்ணே அமோக வெற்றி தான்” என்று ஆர்ப்பரிக்கிறார்கள். ஆனால் எதிர் தரப்போ, “இம்முறை இந்தத் தொகுதியில் இரண்டாம் இடத்தை விசில் பிடிக்கப் போகுது. அதனால பெரியவர் மூன்றாமிடத்துக்குப் போனாலும் ஆச்சரியமில்லை” என்று புளியைக் கரைக்கிறதாம்.