

‘அவார்டு நகர்’ மாவட்டத்தில் களத்தில் இருக்கும் மலர் கட்சி தலைவர் தனது வெற்றி உறுதி என திடமாக இருக்கிறாராம். ஆனால், இவரை எப்படியாவது வீழ்த்தி டெல்லிக்காரர்களுக்கு ‘மெசேஜ்’ அனுப்ப வேண்டும் என நினைத்த சூரியக் கட்சி தலைமை தனது வேட்பாளருக்கு தாராளமாக ‘நிதி உபகாரங்களை’ செய்ததாம்.
அந்த தெம்பில் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வரைக்கும் தாராளமாக எடுத்துவிட்டாராம் சூரியக் கட்சி வேட்பாளர். இதைப் பார்த்துவிட்டு மலர் கட்சி தலைவர் தரப்பும் தலா 1,500 ரூபாயை அள்ளி விட்டதாம்.
ஆனால், இந்த பட்டுவாடா சமாச்சாரங்களை உள்ளூர் நிர்வாகிகளை வைத்துச் செய்யாமல் தனது ‘அல்வா சிட்டியில்’ இருந்து ஐம்பது பேர் கொண்ட குழுவை கொண்டுவந்து அவர்களை வைத்து செய்தாராம் மலர் கட்சி தலைவர். ஆனாலும் எதிர்பார்த்தபடி எல்லா இடத்துக்கும் பணம் பாயவில்லையாம்.
இதையடுத்து, “வேட்பாளர் தான் வெளியூர் இறக்குமதின்னு பார்த்தா, இதுக்கும் நம்மள நம்பாம வெளியூர் ஆட்கள வெச்சு வேலை பாக்குறாங்களே” என்று மலர் கட்சியிலும் இலைக் கட்சியிலும் உள்ளூர் நிர்வாகிகள் ஏகப்பட்ட உள்குத்துகளை செய்துவிட்டார்களாம்.
இதனால், “மலர் தலைவர் மகுடம் சூடுவது சந்தேகம் தான்” என உள்ளூர் நிர்வாகிகள் இப்போதே சத்தமாய் சங்கு ஊதுகிறார்களாம்.