

தென் மாவட்டத்தில் கதர் கட்சி வசம் இருந்த தொகுதியை தனது மகனுக்காக போராடிக் கேட்டுப் பெற்றாராம் சூரியக் கட்சியின், ‘அன்பகம்’ புள்ளி. இதற்காக கதர் பார்ட்டிகள் தான் கம்பு தூக்குவார்கள் என்று பார்த்தால் சொந்தக் கட்சியினர் தான் இப்போது ஒத்துழையாமை இயக்கம் நடத்துகிறார்களாம்.
ஒரு காலத்தில் இந்த மாவட்டத்துப் புள்ளிகள் ‘அன்பகம்’ புள்ளியை சந்திக்க சென்னையில் காத்துக் கிடப்பார்கள். இப்போது நிலைமை தலைகீழாக மாறி, இவர்களைத் தேடி வீடு வீடாய் போய்க் கொண்டிருக்கிறாராம் ‘அன்பகம்’ புள்ளி.
அருவி மாவட்டத்தின் ‘சிவமான’ முன்னாள் செயலருக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கித் தருவதாகவும், சிட்டிங் ‘ஜெயமான’ மாவட்டச் செயலாளருக்கு வாரியத் தலைவர் பதவி வாங்கித் தருவதாகவும் மகனின் வெற்றிக்காக வாக்குறுதிகளை வஞ்சகம் இல்லாமல் அள்ளி வீசுகிறாராம்.
ஆனால், ‘அன்பகத்தின்’ அன்புப் புதல்வர் வெற்றிபெற்று விட்டால் இந்தத் தொகுதி நிரந்தரமாக தலைமையின் நேரடிக் கட்டுப்பாட்டில் சென்றுவிடும். அதன் பிறகு உள்ளூர் மக்களுக்கு இங்கே வேலை இருக்காது” என்று சூரியக் கட்சி சூத்ரதாரிகள் கூடிக் கூடி பேசி வருகிறார்களாம்.