மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரணம் வழக்கை ரத்து செய்யக்கோரி காவல் ஆய்வாளர் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு வழக்கில் தனிப்படை காவலர்களால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் 6 பேரை சிபிஐ கைது செய்தது.
கூடுதல் குற்றப்பத்திரிகையில் மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் உட்பட 4 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை நகை திருட்டு வழக்கில் தனிப்படை காவலர்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தனிப்படை காவலர்கள் விசாரணையில்தான் அஜித்குமார் உயிரிழந்துள்ளார்.
இதற்கும் காவல் ஆய்வாளராக இருந்த எனக்கும் தொடர்பு இல்லை. இருப்பினும் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் என்னை ஒரு குற்றவாளியாக சேர்த்துள்ளது. இதற்கு போலியாக பல ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதனால் அஜித்குமார் காவல் மரணம் தொடர்பாக என் மீதான வழக்கு, குற்றப்பத்திரிகையை ரத்து செய்தும், விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்து, மனு தொடர்பாக சிபிஐ டிஎஸ்பி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.