

எம்எல்ஏ அருள்.
சேலம்: தவெக-வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று ராமதாஸ் தரப்பு பாமகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் அருள் கூறினார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அரசியல் கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவது இயல்புதான். பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தமிழகத்தில் வலுவான கூட்டணி அமையும். ராமதாஸ் யாரை கை காட்டுகிறாரோ, அவர்தான் முதல்வராகப் பொறுப்பேற்று, ஆட்சி அமைப்பார். இன்னும் ஒரு வாரத்தில் கூட்டணி இறுதி செய்யப்படும். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.
மக்கள் ஆதரவுதான் முக்கியம். தவெக தலைவரை இளைஞர்கள் தேனீக்கள்போல மொய்த்து வருகின்றனர். அவருக்கு வாக்களித்து, தமிழகத்தின் முதல்வராக்க மக்கள் முடிவு செய்துவிட்டால், அதையாரால் தடுக்க முடியும். அரசியல் களத்தில் யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது.
பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்று கருதினால் ஏமாற்றம்தான் கிடைக்கும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது அணி உருவாவதில் எந்த தவறும் இல்லை. திமுக, அதிமுக மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தவெகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவ்வாறு சட்டப்பேரவை உறுப்பினர் அருள் கூறினார்.