

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள்.
கோப்புப் படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை: பிரதமர் மோடி மதுரைக்கு இம்மாதம் 28-ம் தேதி வருவதால், சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இப்போது தென் மாவட்ட மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சென்னை மதுராந்தத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வந்திருந்தார். அப்போதே அந்த பொதுக் கூட்டம், மதுரையில்தான் முதலில் நடப்பதாக இருந்தது. பின்னர் அதற்கான இடமும் பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் சென்னைக்கு இந்த பொதுக் கூட்டம் அவசரம் அவசரமாக மாற்றப்பட்டது. அப்போதே ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை திறப்பதற்குதான், அந்த பொதுக் கூட்டம் மதுரையில் நடத்த திட்டமிடுவதாக கூறப்பட்டது.
இதனிடையே, தற்போது திடீரென்று தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் பிப்ரவரி 28-ஆம் தேதி பிரதமர் மோடி, மதுரையில் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். அப்போது அவர், மதுரை தோப்பூர் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஆனால், இது தொடர்பான எந்த அதிகாரபூர்வ தகவலும் வராத நிலையில் ‘எய்மஸ்’ நிர்வாகமும், பாஜகவும் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. அதனால், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை திறக்க வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.
ஏனெனில் கடந்த சட்டமன்ற தேர்தலில் துணை முதல்வர் உதயநிதி, ஒற்றை செங்கலுடன் வந்து ‘எய்ம்ஸ் எங்கே..?’ என்று கேள்வியெழுப்பி பெரும் விவாதத்தை கிளப்பினார். அதனால், அதற்கு இந்த முறையும் இடம்கொடுக்காமல் இருக்கவே, ‘எய்ம்ஸ்’ பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருவதாகவும், பிரதமரை வைத்து பணிகள் முடிந்தளவுக்கு கல்லூரி கட்டிடத்தை திறந்து அடுத்த கல்வி ஆண்டு முதல் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரியை ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு மாற்றுவதற்கு ஏற்பாடுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த முறையும் ‘எய்ம்ஸ்’ திறக்கப்படாவிட்டால் அதை வைத்து அரசியல் செய்யலாம் என திமுக திட்டமிட்ட நிலையில், இந்த மருத்துவமனை திறக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி திறந்து வைக்கும் அளவுக்கு மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டிடப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், பணிகளில் மிகப் பெரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் வீடியோ, புகைப்படங்களை ‘எய்ம்ஸ்’ நிர்வாகம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறது. ஆனால், ‘எய்ம்ஸ்’ கட்டுமானப் பணிகள் நடக்கும் இடத்தில் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இது குறித்து கடந்த வாரம் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டிடப் பணி நடக்கும் வளாகத்திற்கு சென்று வந்த மதுரை ‘எய்ம்ஸ்’ ஆர்ஐடி ஆர்வலர் ஆர்.பாண்டியராஜா கூறுகையில், ‘‘கட்டுமானப் பணிகள் மும்முரமாக இரவு, பகலாக நடக்கிறது. மருத்துவக் கல்லூரி கட்டிடப் பணிகள் முழுமையாக முடிவதற்கு இன்னும் 4 முதல் 5 மாதங்கள் ஆகும்.
மருத்துவமனை பணிகள் தற்போதுதான் 50 சதவீதம் நிலையை எட்டியுள்ளது. மீதமுள்ள ஒட்டுமொத்தப் பணிகளும் நிறைவு பெறுவதற்கு ஓர் ஆண்டுக்கு மேலாகும். தற்போது உணவுக் கூடத்தின் பணிகள் மட்டும் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மாணவ, மாணவிகள் விடுதிகளுக்குான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
அதனால், மருத்துவக் கல்லூரியை பயன்பாட்டுக்கு கொண்டுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஏனென்னில், தற்போது மருத்துவக் கல்லூரி கட்டிடத்தை திறந்து வைத்தாலும், அதன் வகுப்புகள் அடு்த்த கல்வியாண்டு முதல்தான் தொடங்கும். அதற்குள் கல்லூரி கட்டிட முழுமையான பணிகளை முடித்துவிடலாம் என திட்டமிடலாம். அதனால், கல்லூரி கட்டிடம் முடிந்தளவுக்கு பெயின்டிங் அடிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.