

மதுரை மண்டேலா நகரில் நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை: தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு, பணியிட மாற்றம், டெண்டர் ஒப்பந்தங்கள், மணல் திருட்டு என ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதனால், தமிழகத்தில் இருந்து திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்று மதுரையில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 2-வது தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் மதுரை மண்டேலா நகரில் நேற்று நடைபெற்றது.இதில் பிரதமர் மோடி பேசியதாவது: இது பாண்டிய நாடு. வீரம் விளைந்த பூமி. இந்த மகத்தான பூமியில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மாவீரன் அழகு முத்துகோன், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர்கள், இமானுவேல் சேகரனாரின் பங்களிப்பை நினைவுகூர்கிறேன்.
இங்கு வருவதற்கு முன்பு திருப்பரங்குன்றம் சென்று முருகனை தரிசனம் செய்தேன். தமிழக நலனுக்காகவும், நாட்டு நலனுக்காகவும் வேண்டினேன். அதே நேரம், பூர்ணசந்திரன் என்ற இளம் பக்தர் உயிர்த் தியாகம் செய்ததை நினைத்து எனது இதயம் வருந்தியது.
அவரது ஆன்மா சாந்தியடைய முருகனிடம் உருக்கமாக பிரார்த்தித்தேன். அவரது மனைவி, 2 மகன்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். திமுக அரசின் நியாயமற்ற செயல்பாட்டால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது வலியை ஏற்படுத்துகிறது. இறுதியில் வாய்மை வெல்லும். முருக பக்தர்கள் வெல்வார்கள்.
தமிழகத்தில் இருந்து திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மக்கள் தீர்மானித்துவிட்டனர். தமிழக மக்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2021-ல் திமுகவுக்குப் பெரும்பான்மை பலத்தைக் கொடுத்தனர். ஆனாலும், அவர்கள் நல்லாட்சியை தரவில்லை. மாநிலத்தை சூறையாடினர்.
பரம்பரை ஆட்சியை முன்னெடுக்கின்றனர். மதுரை மாநகரம் எம்ஜிஆருக்கு உறுதுணையாக நின்றது. இதனால், மதுரை என்றாலே திமுகவுக்கு வேப்பங்காயாக கசக்கிறது. ஊழல் காரணமாக மதுரை மேயர் ராஜினாமா செய்தார்.
திமுகவினர் அவர்களும் பணியாற்ற மாட்டார்கள். மற்றவர்களையும் பணியாற்ற விடமாட்டார்கள். ‘பணம் நமக்கு, பிரச்சினைகள் மக்களுக்கு’ என்பதே திமுக மாடல். தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளில் சுமார் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பில் 74 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள், புதிய பொருளாதார வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. உரிமைகளுக்காக வாய்கிழிய பேசும் திமுக, மத்தியில் ஆட்சியில் இருந்தபோது எதுவுமே செய்யவில்லை.
காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து 60 ஆண்டுகளுக்கு முன்பே நீக்கிய மாநிலம் தமிழகம். இதனால்தான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து தமிழக மக்களை வஞ்சம் தீர்த்தது காங்கிரஸ் அரசு. அப்போது திமுக வாய்மூடி மவுனமாக இருந்தது. அவர்களது கூட்டணி ஆட்சியில்தான் ஜல்லிக்கட்டை தடை செய்தனர். பாஜக அரசுதான் மீண்டும் கொண்டு வந்தது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாள்தோறும் அதிகரிக்கின்றன. மது, போதை மாஃபியாக்களால் தங்களது குடும்பங்கள் பாதிக்கப்படுவதை பெண்கள் வேதனையோடு பார்க்கின்றனர். ஜெயலலிதா ஆட்சியில் தங்கள் வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருந்தது என்பதை நினைத்துப் பார்க்கின்றனர்.
தமிழகப் பெண்களுக்கு உறுதியளிக்கிறேன். தே.ஜ.கூட்டணி அரசு அமைந்ததும் சட்டம் - ஒழுங்கில் கவனம் செலுத்துவோம். குற்றவாளிகள், போதை மாஃபியாக்கள் சிறையில் தள்ளப்படுவார்கள். பெண்களின் பாதுகாப்பு, கண்ணியம் உறுதி செய்யப்படும்.
அரசியலில் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் காமராஜர். அவருக்கு எதிர்மாறாக இருக்கிறது திமுக. அரசு வேலைவாய்ப்பு, பணியிட மாற்றம், ஒப்பந்தங்கள், மணல் திருட்டு என ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. பொதுவாக, மக்கள் பணியைச் செய்வதில்தான் அமைச்சர்களிடம் ஆரோக்கியமான போட்டி இருக்கும். ஆனால், மோசடி செய்வதில் தான் திமுக அமைச்சர்களிடம் போட்டா போட்டி உள்ளது.
மனசாட்சி இன்றி, ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகளிடம் இருந்து திருடுகின்றனர். இப்படிப்பட்ட ஊழல் அரசு மேலும் தொடர தார்மீக உரிமை இல்லை. இதனால், தமிழக மக்கள் தே.ஜ.கூட்டணி அரசை கொண்டுவர தீர்மானித்துவிட்டனர். எங்கள் கூட்டணி தூய்மையான, திறமையான ஆட்சியை வழங்கும்.
சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தை செய்துள்ளது. இதன்மூலம் 28 முன்னேறிய நாடுகளுடன் இணைந்துள்ளோம். இதனால் இளைஞர்கள், பணியாளர்கள், விவசாயிகள், தொழில் முனைவோருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
இளைஞர்களுக்கு பல லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். உலக அளவில் போட்டியிட்டு வெற்றிபெறும் சந்தர்ப்பம் கிடைக்கும். இவை அனைத்தும் கிடைக்க வேண்டும் என்றால், உங்கள் நலனில் அக்கறை கொண்ட ஓர் அரசு இருக்க வேண்டும்.
தே.ஜ.கூட்டணி அரசால் மட்டுமே மக்களை மையமாகக் கொண்ட, நிலையான ஆட்சியை வழங்க முடியும். தமிழகத்தின், இந்தியாவின் வளர்ச்சியை நாங்கள் உறுதி செய்வோம்.இவ்வாறு பிரதமர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், ஐஜேக நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், தமமுக தலைவர் ஜான்பாண்டியன், புரட்சி பாரதம் தலைவர் ஜெகன்மூர்த்தி, பார்வர்டு பிளாக் கதிரவன், திருமாறன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், அமைப்புச் செயலாளர் ராஜன்செல்லப்பா பங்கேற்றனர்.