

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா | கோப்புப்படம்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் அவரை புகழ்ந்து பேசியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி: “ஜெயலலிதா பிறந்த நாளில் அவரை நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களாலும் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்தார். கருணை, உறுதி என்ற இரண்டு பண்புகளையும் அவர் கொண்டிருந்தார். அவருடனான எனது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் நினைவுகூர்கிறேன்” என்று எக்ஸ் வலைதள பதிவில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த மாத மனதின் குரல் நிகழ்ச்சியிலும் ஜெயலலிதாவை பிரதமர் மோடி புகழ்ந்து பேசி இருந்தார். அதில் கூறியதாவது: சிலர் எப்போதும் மக்களின் இதயங்களில் நீங்காமல் குடிகொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஜெயலலிதா. மக்கள் போற்றும் மகத்தான தலைவராக விளங்குகிறார். பிப்.24 அவரது பிறந்தநாள். அவர் மீது தமிழக மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு இருக்கும் ஈடுபாடு ஆழமானது. அவர் முதல்வராக இருந்தபோது பெண்கள், தாய்மார்கள், சகோதரிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். சட்டம் - ஒழுங்கை சீராக வைத்திருந்தார்.
இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியம் மீது மிகுந்த பெருமிதம் கொண்டிருந்தார். அவரிடம் தேசபக்தி உணர்வு மிகவும் செறிவாக இருந்தது. எண்ணம் தெளிவாக இருந்தது. கருத்துகள் நிறைவாக இருந்தன. ஜெயலலிதா உடனான என்னுடைய ஒவ்வொரு சந்திப்பும், உரையாடலும் என் மனதில் பசுமையாகப் பதிந்துள்ளன. அவருடைய நட்புணர்வை என்னால் மறக்கவே முடியாது. அவருக்கு தலைவணங்கி அஞ்சலி செலுத்துகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்த நாளில், அவரது நெடும் புகழை போற்றுகிறோம், “அம்மா” எங்களின் அடையாளம் … ஏழைகளின் நம்பிக்கை, பெண்களின் தைரியம், தாய்மையின் உருவம்.
அதிகாரம் அவரை உயர்த்தவில்லை; மக்கள் மீது கொண்ட அன்பே அவரை உயர்த்தியது. அவரின் ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு தீர்மானமும், வறுமை ஒழிப்புக்கான சர்வதேச அளவில் தரநிலையை நிறுவி ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியது.
சோதனைகள் சூழ்ந்த தருணங்களிலும் அசைக்க முடியாத மனவலிமையுடன் தமிழகம் காக்க போராடிய தலைவர். மக்கள் பணிக்கான எங்கள் அனைத்து செயல்களிலும் உங்கள் புத்தகத்திலிருந்து ஒரு அத்தியாயத்தை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்று அவர் சொன்னதைப் போல, அதிமுக என்றென்றும் மக்கள் இயக்கமாகவே திகழ்கிறது.
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று அவர் சூளுரைத்தார். அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள்தான் அவரது பிறந்த நாள்.
அஇஅதிமுக அரசின் சாதனைகளையெல்லாம், தங்களது சாதனைகளாக பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் திமுக-வினரின் பிரச்சாரங்களை முறியடித்து, கழகத்தின் தலைமையிலான பொற்கால ஆட்சியில் செய்திட்ட சாதனைகளையெல்லாம் எடுத்துக் கூறி, தேர்தல் களத்திலே மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கு அயராது உழைப்போம்! ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்! என்று அவரது பிறந்த நாளில் வீரசபதம் ஏற்போம். ‘நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’” என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பதிவிட்டுள்ளார்.