

சென்னை: மெட்ரோ ரயில் பயண அட்டை பயன்பாட்டிலிருந்து சிங்கார சென்னை அட்டைக்கு மே 1-ம் தேதிமுதல், முழுமையாக மாற திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பழைய பயண அட்டையில் மீதமுள்ள தொகையை, சிங்கார சென்னை அட்டைக்கு மாற்றிக்கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்க, கவுன்ட்டர்களில் பயணிகள் வரிசையில் நெடுநேரம் காத்திருப்பதைத் தவிர்க்க சி.எம்.ஆர்.எல். பயண அட்டை கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் இந்த அட்டையை பயன்படுத்தும்போது, 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி கிடைக்கும்.
இதற்கிடையில் தேசிய பொது போக்குவரத்து அட்டையை (சிங்கார சென்னை அட்டை) மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்.14-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த அட்டையை ஊக்கப்படுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது.
மேலும், சிங்கார சென்னை அட்டைக்கு முழுமையாக மாற கடந்த ஆண்டு ஏப்.1-ம் தேதி நடவடிக்கை எடுக்கப்பட்டது. 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் படிப்படியாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கும், மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கும் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் மெட்ரோ ரயில் நிறுவன பயண அட்டை பயன்பாட்டிலிருந்து சிங்கார சென்னை அட்டைக்கு மே 1-ம் தேதிமுதல், முழுமையாக மாற திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில்களில் பயணிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டையுடன் கூடுதலாக ‘சிங்கார சென்னை அட்டை (தேசிய பொது போக்குவரத்து அட்டை)’ அறிமுகப்படுத்தப்பட்டது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, நாடு முழுவதும் உள்ள பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில், மே 1-ம் தேதிமுதல், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சிங்கார சென்னை அட்டைக்கு முழுமையாக மாற திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யவும், வாகன நிறுத்தங்களை பயன்படுத்தவும், பயணிகள் தங்களது பழைய பயண அட்டையில் மீதமுள்ள தொகையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி (Mobile App) மூலம் பெறப்படும் QR Stored Value Pass (SVP) அல்லது தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.