தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பை வரவேற்று, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று தேங்காய் உடைத்த மனுதாரர் ராம.ரவிக்குமார், வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் உள்ளிட்டோர். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |
தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பை வரவேற்று கோயிலில் தேங்காய் உடைத்த மனுதாரர்
மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான தீர்ப்பை வரவேற்று, வழக்கு தொடர்ந்த மனுதாரர் ராம.ரவிக்குமார் மற்றும் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆகியோர் 108 தேங்காய்களை உடைத்தனர்.
இவ்வழக்கின் மனுதாரர் ராம.ரவிக்குமார் மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை, முருக நீதியாகப் பார்க்கிறேன். தீர்ப்பின் நகலை முருகன் பாதத்தில் வைத்து, எனது கடமையை நிறைவேற்றி விட்டேன்.
இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. சகோதரராக, மத நல்லிணக்கத்துடன் செயல்படும் மக்களிடையே தமிழக அரசே பிரச்சினையை ஏற்படுத்துவதாக தீர்ப்பின் மூலம் நீதிமன்றம் அரசுக்கு சவுக்கடி கொடுத்துள்ளது. தமிழக அரசைக் கண்டித்து உயிர்நீத்த தீபப் போராளி பூர்ணசந்திரனுக்கு இந்த தீர்ப்பை சமர்ப்பிக்கிறோம்.
முருகன் கோயில் காணிக்கை பணத்தில் சம்பளம் பெற்றுவிட்டு, அறநிலையத் துறையினர் முருகனுக்கு எதிராக செயல்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார். மனுதாரரின் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் கூறும்போது, “நீதிமன்றத்தில் தமிழக அரசு முன்வைத்த பொய்களுக்கு முருகன் பதில் கொடுத்துள்ளார். சட்டம் ஒருபுறம் இருந்தாலும், தர்மம்தான் என்றும் நிலைக்கும் என்பதற்கேற்ப தீர்ப்பு வந்துள்ளது.
தீர்ப்பை வரவேற்று இனிப்புகள் வழங்கிய திருப்பரங்குன்றம் கோட்டைத் தெரு பகுதி பெண்கள்.
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாததற்கு காரணம் அரசியல்தான் என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. தயவுசெய்து இதில் அரசியல் செய்யாதீர்கள். அன்றே தீபம் ஏற்றியிருந்தால், அரை மணி நேரத்தில் நிகழ்வு முடிந்திருக்கும்” என்றார்.
பெண்கள் கொண்டாட்டம்: தீபத்தூண் தொடர்பான தீர்ப்பை வரவேற்று திருப்பரங்குன்றம் கிராம மக்கள் இனிப்புகளை வழங்கினர். மலை உச்சிக்குச் செல்லும் வழியில், பழனியாண்டவர் கோயில் அடிவாரத்தில் உள்ள கோட்டைத்தெரு பகுதி பெண்கள், பொதுமக்களுக்கும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கும் இனிப்பு வழங்கினர்.
மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற எங்களது வேண்டுதல், உயர் நீதிமன்றம் மூலம் நிறைவேறியுள்ளதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற நீதிமன்ற உத்தரவை வரவேற்று, அப்பகுதி பாஜகவினர் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர்.
