

சென்னை: கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் பட்டியல் மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கும் வருமான உச்ச வரம்பை நிர்ணயம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவரான ஈஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பள்ளிகளில் சேர்க்கை வழங்கப்படுகிறது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய குழந்தைகளின் பெற்றோருக்கு ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் என வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பட்டியலின மற்றும் பழங்குடியின குழந்தைகளின் பெற்றோருக்கு எந்த வருமான உச்ச வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை.
சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்படாவிட்டால் வசதியானவர்கள் கூட சாதி அடிப்படையில் இந்த சலுகையை பெற அதிக வாய்ப்புள்ளது.
எனவே பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது போல, சமூக ரீதியில் பின்தங்கியவர்களுக்கும் வருமான உச்ச வரம்பை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஏற்கெனவே மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருப்பதை போல தமிழகத்திலும் சமூக ரீதியில் பின்தங்கிய பட்டியல் மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கும் வருமான உச்ச வரம்பை நிர்ணயிக்கக் கோரி கடந்தாண்டு அக்டோபரில் அளித்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறைச் செயலாளர், தனியார் பள்ளிகள் இயக்குநர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.