125 நாள் வேலையில் குறைவான நபர்களுக்கு அனுமதி: தொழிலாளர்களை தேர்வு செய்வதில் சிக்கல்

125 நாள் வேலையில் குறைவான நபர்களுக்கு அனுமதி: தொழிலாளர்களை தேர்வு செய்வதில் சிக்கல்
Updated on
1 min read

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 125 நாள் வேலைத் திட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில் குறைவான நபர்களை ஈடுபடுத்தும் பணிகளுக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. இதனால், தொழிலாளர்களைத் தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வந்தது. அந்தத் திட்டத்தை ‘விபி ஜி ராம்ஜி திட்டம்’ என பெயர் மாற்றம் செய்ததோடு, வேலை நாட்களின் எண்ணிக்கையையும் 125 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியது. மேலும், தினக்கூலி ரூ.327-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் ரூ.12,642 கோடி மதிப்பிலான பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதித்ததோடு, தங்களது 60 சதவீத பங்குத்தொகையான ரூ.7,585 கோடியை ஒதுக்கியுள்ளது. மீதி 40 சதவீதத்தை மாநில அரசு ஒதுக்க வேண்டும்.

ஏற்கெனவே தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால் நிதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில், நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளதால் குறைந்த தொழிலாளர்களை ஈடுபடுத்தும் பணிகள் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக ஊருணி ஏற்படுத்துதல், மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் நாற்றுப்பண்ணை அமைத்தல் போன்ற திட்டங்களுக்கு மட்டுமே அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

இத்திட்டங்களில் அதிகபட்சம் 5 முதல் 20 தொழிலாளர்களை மட்டுமே ஈடுபடுத்த முடியும். ஏற்கெனவே பிப்ரவரி மாதத்திலிருந்தே இத்திட்டத்தில் மரக்கன்றுக ளுக்கு தண்ணீர் ஊற்ற மட்டுமே தொழிலாளர்களுக்குப் பணி வழங்கப்பட்டு வருகிறது. அதில் குறைந்த பணியாளர்களே ஈடுபடுத்துவதால் தங்களுக்கு பணி வழங்க வேண்டுமென மற்றவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தேர்தல் முடிந்ததும் மற்றவர் களுக்குப் பணி வழங்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறையினர் சமாளித்து வந்தனர். தற்போது குறைவான தொழிலாளர்களை ஈடுபடுத்தும் வகையிலான பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளனர். இதனால், தொழிலாளர்களை தேர்வு செய்து பணி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊராட்சி செயலா ளர்கள் கூறியதாவது: ஒவ்வொரு ஊராட்சியும் மக்கள்தொகை அடிப்படையில் பல தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தொகுப்பிலும் 100 முதல் 300 தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த காலங்களில் அவர்களில் பெரும்பாலோனருக்கு பணி கொடுக்கும் வகையில் வரத்துக் கால்வாய், பாசன வாய்க்கால்கள் சீரமைத்தல் போன்ற பணிகள் தேர்வு செய்யப்பட்டன.

தற்போது தேர்வு செய்யப்பட்ட பணிகளில் குறைந்த தொழிலாளர்களே ஈடுபடுத்த முடியும். இதனால் யாரைத் தேர்வு செய்தாலும் மற்றவர்கள் பிரச்சினை செய்வர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

125 நாள் வேலையில் குறைவான நபர்களுக்கு அனுமதி: தொழிலாளர்களை தேர்வு செய்வதில் சிக்கல்
“தர்மேந்திர பிரதான் நீக்கப்படும் வரை பேச்சுவார்த்தை இல்லை” - ராகுல் காந்தி திட்டவட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in