

சென்னையில் 2-ம் கட்டம் மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல் படுத்தப் படுகின்றன.
இதில், கலங்கரை விளக்கம் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. தொலைவிலான வழித்தடத்தில் பூந்தமல்லி- போரூர், போரூர் - வடபழனி வரை பணிகள் நிறைவடைந்துள்ளன.
அதைத் தொடர்ந்து, பூந்தமல்லி - போரூர் வரையிலான தடத்தில் மெட்ரோ ரயில் மற்றும் வழித்தடத்துக்கு பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனையை இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் குழுவினர் கடந்த ஆண்டு ஆக.16 முதல் ஒரு வாரத்துக்கு மேல் நடத்தினர்.
அதைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி தலைமையிலான குழுவினர், பூந்தமல்லி - வடபழனி இடையே அதிவேக சோதனை ஓட்டத்தை கடந்த 24-ம் தேதி மேற்கொண்டனர். அப்போது, மெட்ரோ ரயிலை மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதித்தனர். மேலும், சிக்னல் அமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிலையில், பூந்தமல்லி முதல் போரூர் வரை முழுமையாகவும். போரூர் முதல் வடபழனி வரை குறைவாகவும் மெட்ரோ ரயில் சேவை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பூந்தமல்லி மெட்ரோ நிலையம் போரூர் சந்திப்பு வரையிலான 14.6 கி.மீ நீளமுள்ள வழித்தடம் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறக்க மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார். இதில் 10 நிலையங்கள் உள்ளன.
ஆரம்பத்தில் பூந்தமல்லி புறவழிச் சாலை மற்றும் போரூர் சந்திப்பு இடையே 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
போரூர் சந்திப்பு முதல் வடபழனி வரை, ஒரு நேரத்தில் ஒவ்வொரு திசையிலும் ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படும். அதன் வேகம் மணிக்கு 25 கி.மீ-க்கும் குறைவாகவே இருக்கும். 20 நிமிடங்கள் இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். ஒரு மாதத்துக்குப் பிறகு, ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்" என்றனர்.