

திண்டுக்கல் அருகே சிறுமலை அடிவாரப் பகுதியில் மக்களை தங்க வைத்திருந்த திமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.
திண்டுக்கல்: நத்தம் தொகுதிக்கு உட்பட்ட சிறுமலை அடிவாரம் பகுதியில் மக்களை திமுகவினர் தங்கவைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து அங்கு சென்ற அதிமுகவினர், திமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் அருகே நத்தம் தொகுதிக்கு உட்பட்ட சிறுமலை அடிவாரம் பகுதியில் தனியார் தோட்டங்களில் ஏராளமான பொதுமக்களை திமுகவினர் தங்க வைத்திருப்பதாக அதிமுகவினருக்குத் தகவல் கிடைத்தது.
பிரியாணி பொட்டலம் விநியோகம்
இதையடுத்து அங்குசென்ற அதிமுகவினர், தோட்டங்களிலும், தகர ஷெட்டுகளிலும் நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் ஆண்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்டனர்.
அவர்களை மாலை வரை இதே இடத்தில் தங்கி இருக்க வேண்டும் என்று திமுகவினர் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தேர்தல் பறக்கும் படையினருக்கு அதிமுகவினர் தகவல் தெரிவித்தனர். பின்னர், அப்பகுதிக்குச் சென்ற அதிமுகவினர், திமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பறக்கும்படையினர் வருகை
அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் இரு தரப்பினரையும் சமரசம் செய்து தோட்டங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களை அவர்கள் வருகை தந்த வாகனங்களிலேயே ஏற்றி அனுப்பி வைத்தனர்.
நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பிரச்சாரத்தின் போது கூட்டம் கூடவிடாமல் தடுப்பதற்காக திமுகவினர் மக்களை அழைத்துவந்து தங்க வைத்ததாகக் கூறப்படுகிறது.