

சென்னை: சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நிலவும் கடும் குளிரால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். இயல்புக்கு மாறான வானிலை காரணமாக கடும் குளிர் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பி.அமுதா தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக சென்னை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. பொதுமக்கள் ஸ்வெட்டர், மஃப்ளர் சகிதமாக காலை, மாலை வேளைகளில் வலம் வருகின்றனர்.
விடுமுறை தினத்தில்கூட குழந்தைகள் அதிகம் வெளியில் விளையாடுவதை பார்க்க முடியவில்லை. இருசக்கர வானங்களில் செல்லும்போது, குளிர் நடுங்கச் செய்கிறது. சென்னை, புறநகர் பகுதிகள் ஊட்டி, கொடைக்கானல் போன்று மாறியது.
மெரினா கடற்கரைக்கு மாலை நேரங்களில் ஸ்வெட்டர் அணிந்துதான் மக்கள் வருகின்றனர். வீடுகளில் தரை ஐஸ்கட்டிபோல ஜில் என இருக்கிறது. இந்த கடும் குளிரால் இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
இதுபோன்ற கடும் குளிர் நிலவுவதற்கான காரணம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பி.அமுதா கூறியதாவது: கடந்த 1891 முதல் 2026 வரை ஜனவரி மாதத்தில் 21 முறை தான் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகியுள்ளன.
இந்த ஆண்டு ஜனவரியில் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது. இது வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக மன்னார் வளைகுடா அருகே நீடித்து வருகிறது. ஏற்கெனவே வட மாநிலங்களில் குளிர் அலையின் தாக்கம் உள்ளது.
மேலும், வளிமண்டல மேலடுக்குகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக, வட மாநிலத்தில் நிலவும் குளிர் காற்று ஈர்க்கப்பட்டு வட தமிழகம் நோக்கி வருகிறது.
தெற்கு திசையில் இருந்தும் குளிர் காற்று வட தமிழகம் நோக்கி வருகிறது. கடந்த 4 நாட்களுக்கு மேலாக சூரிய ஒளியே வராத நிலையில், நிலத்திலிருந்து வெளியேறும் வெப்பம் தடைபட்டு, பூமியும் குளிர்ச்சி அடைந்துள்ளது.
ரஷ்யா வழியாக சைபீரிய குளிர் அலையின் தாக்கமும் தமிழகம் நோக்கி வருகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் குளிர் அதிகரித்துள்ளது. இது இயல்புக்கு மாறான வானிலையால்தான் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.