“செங்கோட்டையன்கள் எல்லாம் செல்லாக்காசாகி விடுவார்கள்!” - ததக தலைவர் பழ.கருப்பையா பளிச் நேர்காணல்
யாராவது வரமாட்டார்களா... அதைவைத்து தங்களின் ஓட்டு வங்கியை பெருக்க முடியாதா என்று பிரதானக் கட்சிகளே ‘ஆள்தூக்கி’ அரசியலை பிரமாதப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், “பொறுக்கித் தின்ன நினைக்கும் யாரும் எங்கள் கட்சிக்கு வரவேண்டாம்” என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டு ‘தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம்’ என்ற தமது கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் பழ.கருப்பையா. அவரிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.
தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் இந்தத் தேர்தலில் என்ன முடிவெடுக்கப் போகிறது?
தமிழ்நாட்டை சூறையாடி வருகின்ற ஊழல் மலிந்த, ஆட்சித் திறன் அற்ற திராவிட மாடல் அரசை அகற்றுவதே எங்களின் தலையாய நோக்கம். அதற்காக எதிர்த்தரப்புடன் இணைந்து பணியாற்றத் தீர்மானித்திருக்கிறோம்.
விஜய்யின் அரசியல் வருகையைப் எப்படிப் பார்க்கிறீர்கள்?
விஜய் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. ஆனால் அவர், தானே முதலமைச்சர் என்கிறார். அதற்காக ஆட்சியில் பங்கு என்ற தூண்டிலை எடுத்துப் போட்டார். காங்கிரஸ் அந்தத் தூண்டிலில் விழும் என்று எதிர்பார்த்தார். ஆனால், இவரைச் சொல்லி திமுக-வை மிரட்டத்தான் காங்கிரஸ் நினைத்ததே தவிர, இவர் பக்கம் வரவிரும்பவில்லை. இவரே கரை சேருவாரா என்று தெரியாதபோது மற்ற கட்சிகள் தங்களுக்கு இருக்கின்ற இருப்பையும் இழக்க விரும்பவில்லை. தேர்தல் களத்தில் பாடம் கற்றுக் கொண்டு விஜயகாந்த் தன்னை மாற்றிக் கொண்டார். களத்தில் படிக்காத விஜய்க்கு அது புரியவில்லை.
ஆனால், விஜய்யைக் கண்டு எல்லாக் கட்சிகளுமே அலறுகின்றனவே..?
எம்ஜிஆர் ஒருவர் தான் அரசியலைப் புரிந்து அரசியலோடு வளர்ந்த நடிகர். அவருக்கு யோசனை சொல்ல கல்யாணசுந்தரம் போன்ற அரிய மனிதர்கள் இருந்தார்கள். ஆனால் விஜய்க்கு, பாமக-வை கவிழ்த்துவிட்டு வந்த ஜான் ஆரோக்கியம் போன்றவர்கள் தானே ஆலோசகர்களாக இருக்கிறார்கள். பெருங்கூட்டைத்தக் கூட்டினால் நாடே அதிர்ந்துவிடும் என்று ஆலோசனை சொன்னார்கள்.
அப்படி கூட்டத்தைத் திரட்டி 41 பேரைச் சாகடித்தார்கள். இருந்தாலும் திமுக-வை தோற்கடித்தே ஆகவேண்டும் என்பதால் விஜய்யை தனது கூட்டணிக்குள் சேர்க்க துடிக்கிறது அதிமுக. தங்களுக்கு விழும் சிறுபான்மையினர் ஓட்டுகளை சிதிலப்படுத்திவிடுவார் என்பதால் திமுக விஜய்யைப் பார்த்துப் பதறுகிறது.
இந்தத் தேர்தலுடன் செங்கோட்டையனின் அரசியல் சகாப்தம் முடிந்துவிடும் என்று சொல்லி இருக்கிறீர்களே..?
ஆமாம். பிரபலமான ஒரு மனிதர் கட்சி மாறினால் அவரது சாதி ஒட்டுமொத்தமும் அவர் பின்னால் வந்துவிடும் என்பது யூடியூபில் இருக்கிறவர்கள் பேசுகிற பேச்சு. ஆனால், அது உண்மை இல்லை. ஒருமுறை கருணாநிதிக்கும் ஒருமுறை ஜெயலலிதாவுக்கும் எதிர்ப்பு உச்சத்தில் இருந்தது. அதுபோல இப்போது திமுக எதிர்ப்பு என்பது உச்சத்தில் இருக்கிறது. திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்றால் யாரை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியும். அதனால் செங்கோட்டையன்கள் எல்லாம் செல்லாக்காசாகி விடுவார்கள்.
ஸ்டாலினுக்கு புத்தி இல்லை என்கிறீர்களே... இது பெரிய வார்த்தை இல்லையா..?
பிறகென்ன... நாலரை ஆண்டுகளில் நாலரை லட்சம் கோடி கடனை வாங்கி வைத்திருக்கிறார்கள். ஒன்றுமில்லாததை எல்லாம் பெரும் பிரச்சினையாகப் பேசுகிறது திமுக. ஆனால், பேசவேண்டியதை பேச மறுக்கிறார்கள். எஸ்ஐஆரில் முஸ்லிம் வாக்குகளை எல்லாம் நீக்கிவிடுவார்கள் என்று பீதியைக் கிளப்புகிறார் ஸ்டாலின். பிஹாரில் இருந்து ஒரு கோடி பேர் தமிழ்நாட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள்.
இவர்களெல்லாம் வாக்களித்தால் தமிழ்நாட்டின் நாகரிகம், பண்பாடு என்னாகும்? நாளை, மொழியின் வளம் தெரியாத கூட்டத்திடம் தமிழகத்தின் ஆட்சி சிக்காது என்தற்கு என்ன உத்தரவாதம்? ஆனால், இதையெல்லாம் பேச மறுக்கிறார் ஸ்டாலின். ஏனென்றால், பிஹாரிகளுக்கு பாதுகாப்புத் தருகிறோம் என்று சொல்லி நிதிஷ் குமாரின் காலில் விழுந்து அவர்களை தமிழகத்துக்கு அழைத்து வந்ததே ஸ்டாலின் தான்.
விஜய்யும் சீமானும் தமிழக அரசியலையே குழப்பிவிட்டதாக குறைபட்டிருக்கிறீர்களே..?
ஐயோ... சீமானை எல்லாம் ஒரு அரசியல்வாதியாகவே பேசாதீர்கள். ராஜாஜி முதல்வராக இருந்த போது அவருக்கு எதிர்வரிசையில் பெரிய பெரிய மனிதர்களெல்லாம் இருந்தார்கள். இப்போது பாருங்களேன்... ஆளுகிறவர் ஸ்டாலினாக இருந்தால் சீமானும் விஜய்யும் தான் எதிர்க்கட்சியாக இருப்பார்கள். அதிமுக-வும் திமுக-வும் வேண்டாம் என்ற மனநிலையில் குறிப்பிட்ட சதவீதத்தினர் எப்போதுமே இருப்பார்கள்.
இந்த இரண்டு கட்சிகளுக்கு எதிராக ஒரு கழுதையை நிறுத்தினாலும் அவர்கள் அதற்கு வாக்களிப்பார்கள். அப்படித்தான் சீமான் 8 சதவீத வாக்குகளைப் பெற்றார். இம்முறை அதை விஜய் பெறுவார். விஜய் செய்தித்தாள் எல்லாம் படிக்கிறாரா என்று தெரியவில்லை. நம்முடைய சீமான் செய்தித்தாளை படித்துவிட்டு புரட்டுகிற புரட்டு தாங்கமுடியவில்லை.
அதிமுக-வை பழனிசாமி சரியான திசையில் வழிநடத்துவதாக நினைக்கிறீர்களா..?
அதனால் தானே அவ்வளவு பெரிய கட்சி அவரது கட்டுக்குள் இருக்கிறது. வெளியே போன ஓபிஎஸ்ஸும் தினகரனும் ஸ்டாலினை ஒழிக்க வேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாக பழனிசாமியை ஒழிக்க வேண்டும் என்று பேசுவதிலிருந்தே தெரியவில்லையா பழனிசாமி சரியான திசையில் தான் பயணிக்கிறார் என்று.
உதயநிதியை கமல்ஹாசன் அநியாயத்துக்கு புகழ்வதன் ரகசியம் என்னவாக இருக்கும்?
அந்த ரகசியத்தைக் கமலிடமே கேளுங்கள். நியாயமான புகழ்ச்சிக்கு தகுதியுடைய மனிதனை புகழ்ந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், இப்போது புகழ்ச்சி எல்லாம் விருது கொடுப்பது போலத்தான். எல்லாவற்றுக்கும் தனிப்பட்ட நோக்கம் என்று வந்துவிட்ட பிறகு இப்படி எல்லாம் நடக்கத்தான் செய்யும்.
அறமான ஒரு மனிதர் தமிழகத்தை ஆளவேண்டும் என்று சொல்லும் உங்களால் அப்படியான ஒருவரை அடையாளம் காட்டமுடியுமா?
அறம் ஆளவேண்டும் என்பது எனது விருப்பம். இருப்பவர்களில் யாரை இவர் கொஞ்சம் பரவாயில்லை என்று நினைக்கிறோமோ அவர்கள் கையில் ஆட்சியை ஒப்படைக்க வேண்டியது தான்.
