

சென்னை: உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்துச்செய்தி:
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: மகளிர் தங்களது உரிமைகளை பெறுவதோடு, பொருளாதார ரீதியாகவும் உயர்வடைந்து, அவர்களது லட்சியங்கள் நிறைவேறுவதன் மூலமே அவர்களது வாழ்வு ஏற்றம்பெறும். மகளிருக்கு சமஉரிமை, சமவாய்ப்பு வழங்குவதோடு, சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் அவர்களுக்கு முழுமையாக கிடைக்கும் வகையில் நல்ல சூழல் உருவாக வேண்டும். அதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபடுவோம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: மகளிர் தினத்தில் பெண்களுக்கு அரசு வழங்கும் வாழ்த்துகளோ அல்லது சில விருதுகளோ அவர்களின் வாழ்வை மேம்படுத்தாது. தமிழக பெண்களுக்கு அரசு வழங்கக்கூடிய ஆகச்சிறந்த பரிசு பூரண மதுவிலக்கு மட்டுமே. வாழ்க்கையே போர்க்களம், வாழ்ந்துதான் பார்க்கணும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், மதுவின் காரணமாக நிகழும் கொலைகள், பாலியல் கொடுமைகள் நாளும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கான 33 விழுக்காடு பிரதிநிதித்துவம் என்பது இன்னும் எட்டா கனியாகவே உள்ளது. உலக மகளிர் தினத்தில் பெண்களுக்கான சமநீதியும், சம உரிமையும் கிடைக்க உறுதி கொள்வோம்.
பாமக தலைவர் அன்புமணி: வீட்டையும், நாட்டையும் தாங்கி காக்கும் மகளிருக்கு, உலக மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மகளிருக்கு அதிகாரமும், உரிமையும் அளிப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதை விடமுக்கியம் பாதுகாப்பு. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்காத மாநிலமாக தமிழகத்தை மாற்றினால் தான் பெண்களுக்கு எளிதாக அதிகாரமும், உரிமையும் கிடைக்கும்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: பெண்கள் அனைத்து துறைகளிலும் திறமையுடன் முன்னேறி வரும் இக்காலகட்டத்தில், அரசியல் துறையிலும் அதிக அளவில் பங்கேற்பது மிகவும் அவசியம். பெண்களின் பங்கு குடும்பத்துக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் ஒரு மகத்தான சேவையாக மாற வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: பெண்கள் விடுதலை இல்லாமல் சமூக விடுதலை சாத்தியமில்லை. பெண்களின் உரிமைகள், சமத்துவம், சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை காக்கும் போராட்டங்களை தீவிரப்படுத்துவோம். பெண்கள் மீதான பொருளாதாரச் சுரண்டலுக்கும், சமூக ஒடுக்குமுறைக்கும் எதிராக ஒன்றுபட்ட மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்ப உறுதி ஏற்போம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மகளிர் சுமரியாதையுடன், சுதந்திரமாக, பாதுகாப்பாக வாழவும், சமவாய்ப்பை பெறவும் அனைவரும் துணை நிற்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மகளிரின் பாதுகாப்பான முன்னேற்றத்துக்கு உதவிடும் வகையில் செயல்பட வேண்டும்.
ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து: பெண்கள் ஒரு குடும்பத்தின் அடித்தளம் மட்டுமல்ல; சமூக முன்னேற்றத்தின் சக்தியாகவும், நாட்டு வளர்ச்சியின் முதுகெலும்பாகவும் விளங்குபவர்கள். அனைத்து மகளிருக்கும், மகளிர் தின வாழ்த்துகள். இவர்களுடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.