

சென்னை: தொடர் போராட்டத்தை அடுத்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். எனினும், பணிநிரந்தரம் செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று பகுதிநேர ஆசிரியர்கள் அறிவித்தனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவார்கள். அதற்கு ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. மேலும், பணிநிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில்சென்னையில் கடந்த ஜன.6-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.அதன் படி நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்களை போலீஸார் கைது செய்து வானகரத்தில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர்.
இதற்கிடையே கூட்டுக்குழு நிர்வாகிகளுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர் ஆர்த்தி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.2500 உயர்த்தப்பட்டு இனி மாதம் ரூ.15 ஆயிரமாக வழங்கப்படும். மே மாத விடுமுறை காலத்திலும் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வழங்கவுள்ளோம். மேலும், அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் சேர்க்கப்படுவார்கள். இதுதவிர, இறந்துபோன 200 ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்.
அதேநேரம் பணிநிரந்தரம் செய்வது குறித்து சட்டத் துறை அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும். மத்திய அரசு தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு கடந்த 2 ஆண்டுகளில் தர வேண்டிய ரூ.3,548 கோடியை இன்னும் வழங்கவில்லை. இதை ஆசிரியர்களும் அறிவார்கள். பகுதிநேர ஆசிரியர்களை இந்த அரசு கைவிடாது. மேலும், அவர்களது வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றி தரப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். அதேநேரம் பணிநிரந்தரம் கோரிக்கை நிறைவேறும் வரும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக்குழு அறிவித்தது.
தற்கொலைக்கு முயன்ற ஆசிரியர் உயிரிழப்பு: போராட்டத்தின் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கண்ணன் தற்கொலைக்கு முயன்றார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த விவகாரம் சக ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முன்னதாக ஊதிய உயர்வு அறிவிப்பைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆசிரியரின் மரணம் களத்தை மாற்றியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்த தற்கொலை விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாட்டை கண்டித்தும், அவர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் இழப்பீடு தர வலியுறுத்தியுள்ளனர்.