

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏகானாபுரத்தில் பட்டாசு வெடித்து, அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போராட்டக் குழுவினர் மற்றும் பொதுமக்கள்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி புதிய பசுமை வழி விமான நிலையம் அமைக்கும் திட்டம் முழுமையாகக் கைவிடப்படுவதாக சட்டப்பேரவையில் நேற்று 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்தார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து ஏகனாபுரம் கிராம மக்கள், போராட்டக் குழுவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர்.
மேலும் ஏகனாபுரம் பிரதான சாலைக்கு முதல்வரின் பெயரைச் சூட்ட கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், விரைவில் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து அரசிடம் நன்றி தெரிவிக்கவுள்ளதாகவும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை மையமாக வைத்து காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட பல்வேறு கட்டமைப்பு மற்றும் இணைப்புத் திட்டங்களின் நிலை என்ன என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
விமான நிலையத்தை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்ட பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டம், சென்னை பெங்களூரு விரைவுச் சாலையுடன் பரந்தூரை இணைக்கும் அணுகு சாலைகள் மற்றும் தென் மாவட்டங்களை எளிதில் சென்றடையும் நோக்கில் நடைபெற்று வரும் காஞ்சிபுரம் - கூட்டேரிப்பட்டு 4 வழிச் சாலைப் பணிகள் ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை.
மேலும், காஞ்சிபுரம் புறவழிச்சாலை விரிவாக்கம், உத்திர மேரூர் மற்றும் வாலாஜாபாத் வழித்தடங்களின் இணைப்பு, தொழிற்பூங்காக்கள் விரிவாக்கம் போன்றவை திட்டமிடப்பட்டிருந்தன.
விமான நிலையத் திட்டம் மாறினாலும், காஞ்சிபுரம் மற்றும் சென்னை புறநகர் பகுதியின் ஒட்டுமொத்த போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், தொழில் வளர்ச்சி தடைபடாமல் இருக்கவும் இந்த இணைப்புச் சாலைகள், 4 வழிச் சாலைப் பணிகள் மற்றும் மெட்ரோ திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர்.