

மேட்டூர்: எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி 6-வது முறையாக வெற்றி பெற்றார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக பொதுசெயலாளர் பழனிசாமி 1989-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1991, 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றார். 1996, 2006 ஆகிய தேர்தல்களில் தோல்வி அடைந்தார். தற்போது, 8-வது முறையாக எடப் பாடியில் போட்டியிட்டார்.
அதேபோல், திமுக சார்பில் காசி, நாதக சார்பில் பிரியதர்ஷினி போட்டியிட்டனர். தவெக வேட்பாளராக அருண்குமார் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், முன்மொழிபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. எனவே, சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாருக்கு தவெக தலைவர் விஜய் ஆதரவு அளித்தார்.
இதனிடையே, சங்ககிரியில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்தலின் பதிவான வாக்குகள் 25 சுற்றுகளாக நேற்று எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்து இறுதி சுற்று வரை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தொடர்ந்து முன்னிலை வகித்தார். தவெக தலைவர் விஜய் ஆதரவு அளித்த வேட்பாளர் பிரேம்குமார் 2-வது இடத்தை பிடித்தார். திமுக வேட்பாளர் காசி அனைத்து சுற்றுகளிலும் 3-ம் இடம் பிடித்தார்.
வாக்கு எண்ணிக்கை இறுதியில் 1 லட்சத்து 48,933 வாக்குகள் பெற்று 98,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தொடர்ந்து, எடப்பாடி தொகுதியில் பழனிசாமி 6-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.