

சென்னை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கட்சியில் சிறப்பு பொதுக்குழுவை கூட்டுவதற்காக பழனிசாமிக்கு எதிராகச் சண்முகம் தரப்பு அதிரடியாகக் கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளது. மறுபுறம் சண்முகம் தரப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாட பழனிசாமி தரப்பு முடிவு செய்திருப்பதால் அக்கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக வட்டாரங்கள் கூறியதாவது: சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தொடர்ந்து, திமுகவின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடிக்கப் பழனிசாமி காய் நகர்த்தியதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு தரப்பினர் தனி அணியாகச் செயல்படத் தொடங்கினர்.
இதன் உச்சக்கட்டமாக, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி.சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 25 பேர் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதேநேரம், பழனிசாமி தலைமையிலான 22 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 பேரையும் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பொறுப்புகளில் இருந்து பழனிசாமி அதிரடியாக நீக்கிவிட்டு, அந்த இடங்களுக்குத் தனது ஆதரவாளர்களை நியமித்தார். மேலும், இரு தரப்பும் மாறி மாறி சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் புகார்களை அளித்துள்ளனர்.
இதையடுத்து, பழனிசாமியைப் பதவியில் இருந்து நீக்குவதற்காக அல்லது அவரைப் பணிய வைப்பதற்காகச் சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டும் முயற்சியில் சண்முகம் தரப்பு இறங்கியுள்ளது. அதிமுகவின் சட்டவிதிகளின்படி, ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு மனு அளித்தால், சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்ட முடியும். இதைப் பயன்படுத்தி, மாவட்ட வாரியாகப் பொதுக்குழு உறுப்பினர்களைச் சந்தித்துக் கையெழுத்து பெறும் பணியைச் சண்முகம் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் தீவிரமாகத் தொடங்கியுள்ளனர்.
பொதுக்குழு கூட்டப்பட்டால் தனக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழும் என்பதால், இப்போதைக்குக் கூட்டத்தைக் கூட்ட பழனிசாமி தயாராக இல்லை. சண்முகம் தரப்பின் இந்த ‘கையெழுத்து வேட்டை’ வியூகத்தை முறியடிக்க, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்
தில் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் பழனிசாமி நேற்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, "அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என சண்முகம் தரப்பிலிருந்து யாராவது வந்து கையெழுத்து கேட்டால், யாரும் எக்காரணம் கொண்டும் கையெழுத்துப் போடக் கூடாது” என்று தனது ஆதரவாளர்களுக்குப் பழனிசாமி கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மறுபுறம், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த சண்முகம் தரப்பு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்திப் பழனிசாமி தரப்பில் ஆளுநரை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைக்க திட்டமிட்டிருந்தனர். இதற்காக, நேற்று தமிழகம் வந்திருந்த ஆளுநரைச் சந்திக்கப் பழனிசாமி தரப்பு நேரம் கேட்டிருந்தும், அவர்களுக்கு ஆளுநர் தரப்பிலிருந்து அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், இந்த விவகாரத்தில் சபாநாயகர் மற்றும் ஆளுநரின் நடவடிக்கைகளுக்காகக் காத்திராமல், நேரடியாக நீதிமன்றத்தை நாடி சண்முகம் தரப்பு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யப் பழனிசாமி தரப்பு தீவிரமாக வேலைகளைத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், சண்முகம் அணியில் இருக்கும் எம்.எல்.ஏக்களை மீண்டும் தங்கள் பக்கம் இழுக்கும் ரகசியப் பேச்சுவார்த்தைகளும் பழனிசாமி தரப்பால் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால் அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
இரண்டு மா.செ.க்கள் நீக்கம்: இதனிடையே, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் வைரமுத்து, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் கிருஷ்ணமுரளி ஆகியோர் அவர்கள் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.