“தமிழக வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபடுகிறோம்” - பிரதமர் மோடி

திருச்சி அரசு விழாவில் பேச்சு
“தமிழக வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபடுகிறோம்” - பிரதமர் மோடி
Updated on
2 min read

திருச்சி: “வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்குவதே எங்கள் இலக்கு. இதற்காக மத்திய அரசு அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறது” என்று திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

சுமார் ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி, இன்று திருச்சிக்கு வருகை தந்தார்.

திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் இரண்டு அமிர்த பாரத் விரைவு ரயில்கள், இரண்டு விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணிகள் ரயில் ஆகியனவற்றின் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

பின்னர் விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘இன்றைய நிகழ்ச்சி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. சுமார் ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களோடு தொடர்புடையது இந்த நிகழ்ச்சி.

இந்த திட்டங்கள், தூய்மையான எரிசக்தி, பெட்ரோல் தயாரிப்பு, கிராமப்புற இணைப்பு, நெடுஞ்சாலை மேம்பாடு உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் தொடர்பானவை. இந்த திட்டங்கள் எரிசக்தியின் அணுகலை அதிகரிப்பதோடு, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பை அளிக்கவல்லது.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் நகர எரிவாயு கட்டமைப்புக்கு அடிக்கல் நாட்டுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திட்டத்துக்காக சுமார் ரூ.3,700 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பின் மூலம் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சுமார் 9 லட்சம் குடும்பங்களுக்கும் நூற்றுக்கணக்கான நிறுவனங்களுக்கும் குழாய் வழியாக இயற்கை எரிவாயுவை கொண்டு சேர்க்கப்பட இருக்கிறது. வீடுகளுக்கே குழாய் வழியில் எரிவாயு கொண்டு செல்லப்படுவதால், இது மக்களின் வாழ்க்கையை மேலும் எளிதாக்கும்.

இதன்மூலம், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும். இயற்கை எரிவாயு என்பது சுற்றுச்சூழலுக்கு ஏற்றது. 8 ஆண்டுகளில், 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையான சுற்றுச்சூழல் நன்மைகளை அளிக்க வல்லது இந்த திட்டம் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள மசகு எண்ணெய் கலவை ஆலை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த வகை ஆலைகளில் இது உலகிலேயே மிகப் பெரியது என்பது உங்களுக்கு பெருமிதத்தை அளிக்கும். இந்த ஆலை தமிழ்நாடு மற்றும் பிற மாநில தொழிற்சாலைகளின் தேவையை நிறைவேற்றும். இந்த ஆலை காரணமாக மசகு எண்ணெய் இறக்குமதி பெருமளவில் குறையும். இது நாட்டுக்கு மிகப் பெரிய சேமிப்பை வழங்கும்.

இன்று நான், தமிழ்நாட்டில் 370 கி.மீ நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளை தொடங்கிவைத்துள்ளேன். இந்த பணிகள் அனைத்தும், பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது கிராமப்புறங்களில் சந்தைகள், பள்ளிகள் மற்றும் சுகாதார வசதிகளுக்கான இணைப்பை கணிசமாக மேம்படுத்தும்.

ஆடி திருவாதிரை விழாவில் கலந்து கொள்ள கடந்த ஆண்டு கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வருகை தந்தது மகிழ்ச்சி நினைவில் உள்ளது. மாமன்னன் ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தின் ஆயிரமாவது ஆண்டு தொடக்கத்தை நாம் கொண்டாடினோம். அது யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இடம்.

உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை அது ஈர்த்து வருகிறது. இன்று நாம் கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். இந்த நெடுஞ்சாலை, ஆலயத்துக்கு வெகு அருகில் இருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கும் பக்தர்களுக்கும் பாதுகாப்பானதாக இருக்கும். கோயிலுக்கு வரும் வாகனங்கள் தவிர்த்து மற்ற வாகனங்கள் புறவழிச் சாலையில் திருப்பிவிடப்படும்.

கடந்த வாரம் நான் மதுரை வந்தபோது 8 நவீன மறுவடிவமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைத்தேன். இன்று பல புதிய ரயில்களின் இயக்கத்துக்கு பச்சைக் கொடி காட்டி உள்ளேன்.

நாகர்கோவில், கோவை, ராமேஸ்வரம், மயிலாடுதுறை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளை மற்ற பகுதிகளோடு இந்த ரயில்கள் இணைக்கின்றன. இதனால், சுற்றுலாத்துறை அதிகரித்து இளைஞர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

மேம்பட்ட இந்தியாவை உருவாக்க மேம்பட்ட தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் எங்கள் இலக்கு. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு முழு அர்ப்பணிப்போடு இருக்கிறது மத்திய அரசு. மாநிலத்தின் மேன்மைக்கு நாங்கள் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறோம். தொடர்ந்து பாடுபட்டு வருவோம்’’ என்று பிரதமர் மோடி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எல்.முருகன், மாநில அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

“தமிழக வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபடுகிறோம்” - பிரதமர் மோடி
திருச்சியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in