பாலியல் புகார்: பழிவாங்கப்பட்ட ரயில்வே பெண் ஊழியருக்கு ஓய்வூதிய பலன் வழங்க உத்தரவு
சென்னை: பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்ததால் அதிகாரிகளால் பழிவாங்கப்பட்ட ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க பெண் ஊழியருக்கான பணப்பலன்களை நிலுவையின்றி 8 வார காலத்துக்குள் வழங்க ரயில்வே தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள ரயில்வே தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றிய பெண் ஊழியருக்கு அதே சங்கத்தில் உதவிச் செயலாளராக பணியாற்றிய நாககேசரி என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து அவருக்கு எதிராக அந்தப்பெண் ஊழியர் கடந்த 2001 ஏப்ரலில் சங்கத்தின் தலைவரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் நாககேசரிக்கு எதிராக நடவடிக்கை எடுத்த சங்கத்தலைவர், அவரது பிரிவில் பெண்ஊழியர்களை நியமிக்கக் கூடாதுஎன உத்தரவிட்டார்.
ஆனால் அதே ஆண்டு ஜூலையில் மீண்டும் அதிகாரத்துக்கு வந்த நாககேசரி, மீண்டும் அந்தபெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதையடுத்து தேசிய மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம், மகளிர் ஆணையம், முதல்வரின் தனிப்பிரிவு, தெற்கு ரயில்வே பொது மேலாளர், காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு பெண் ஊழியர் புகார் அளித்தார்.
இதன்தொடர்ச்சியாக கடந்த 2004-ம் ஆண்டு பெண் ஊழியர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்த அப்போதைய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான தற்போதைய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சம்பத் உள்ளிட்டோர் அடங்கிய குழு, பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டப்பட்ட உதவிச் செயலாளரான நாககேசரியை இடைநீக்கம் செய்யவும், பெண் ஊழியரை மீண்டும் பணியமர்த்தவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த 2023-ல் அந்த பெண் ஊழியர் வயது முதிர்வின் காரணமாக ஓய்வுபெற்ற நிலையில், அவரை ஓய்வுபெற அனுமதிக்காமல் அவருக்கு எதிரான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் தனக்கு பணி ஓய்வும் ஒய்வூதியபலன்களையும் இடைநீக்க காலத்தில் இருந்து தற்போது வரையிலான நிலுவை பணப்பலன்களையும் வழங்கக்கோரி பெண் ஊழியர் சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: பணியிடங்களில் பெண்களுக்கு எந்தவொரு பாலியல் அத்துமீறல்களும் நேராமல் உறுதி செய்ய வேண்டியது நிர்வாகத்தின் கடமை. ஆனால் பாலியல் தொல்லை அளித்த நபர் மீது நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் ஒன்றுகூடி பாதிக்கப்பட்ட பெண்ணை இடைநீக்கம் செய்து பழிவாங்கியுள்ளனர்.
பாலியல் குற்றச்சாட்டுக்காக நாககேசரிக்கு சிறை தண்டனை விதித்தபிறகும்கூட அவர் மீது துறைரீதியாக எந்தவொரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்க
வில்லை. இந்நிலையில் நாககேசரியும் இறந்துவிட்டார். பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் கடந்த 2023-ம் ஆண்டு ஓய்வு பெற்றபின்னரும், அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை இன்னும் முடியவில்லை.
அந்த பெண் ஊழியர் ஓய்வு பெறதகுதியுடையவர் என்பதால் அவருக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து நிலுவை பணப்பலன்களையும் 8 வாரத்துக்குள்வழங்க வேண்டும். காலம் தாழ்த்தினால் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
