மதுரை: நீதிபதி குறித்து அவதூறாகப் பேசியதாக வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், வழக்கறிஞரின் அவதூறுப் பேச்சு விவரங்கள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறாகப் பேசியதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பதிவாளர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “நீதி வழங்குவதற்கு இடையூறாக இருக்கும் வகையில் வழக்கறிஞரின் செயல்பாடு என்ன?” என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிவாளர் தரப்பில், “நீதிபதி சாதி அடிப்படையில் ஒரு தலைப்பட்சமாக தீர்ப்பு வழங்குவதாக வாஞ்சிநாதன் பொதுவெளியில் பேசியிருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: வழக்கறிஞர் மீதான குற்றச்சாட்டு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு வழிவகுக்குமா? சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியது என்ன? அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவியதும், அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர் என்ன பேசினார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதன் பிறகே உரிய முடிவெடுக்க முடியும். அவரின் அவதூறு தனிநபருக்கு எதிரானதா அல்லது நீதித்துறைக்கு எதிரானதா என்பதை அறிய முடியும்.
அதன் பிறகே குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியுமா? என்பதை முடிவு செய்ய முடியும். நீதிபதிகள் முதலில் இந்திய குடிமகன்கள்தான் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
அவர்களது பணியின் அடிப்படையில் நீதிபதிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். வழக்கறிஞரின் பேச்சு தொடர்பான குறிப்புகள் மற்றும் ஆவணங்களை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்ய வேண்டும்.
அதை ஆய்வு செய்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை மார்ச் 2-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.