

சென்னை: சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தொடரப்பட்டுள்ள வழக்கில், முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியை கைது செய்து ஆஜர்படுத்தும் வகையில் பிடிவாரண்ட் பிறப்பித்து ஜார்ஜ் டவுன் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்தாண்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் திமுக அமைச்சர் க.பொன்முடி சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் தனிநபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ் டவுன் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பொன்முடிக்கு எதிராக உமா ஆனந்தன் தொடர்ந்த வழக்கு ஜார்ஜ் டவுன் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி.சுந்தரபாண்டியன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி தரப்பில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கு உமா ஆனந்தன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.மகேஷ் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். மேலும் அவர், ‘‘எதிர்மனுதாரரான பொன்முடி ஒரு விசாரணைக்குக்கூட நேரில் ஆஜராகாமல் வழக்கை இழுத்தடித்து வருகிறார்.
இந்த வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே பொன்முடி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கூடாது’’ என வாதிட்டார்.
அதையடுத்து, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து, பொன்முடியை கைது செய்து ஆஜர்படுத்தும் வகையில் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்த நீதிபதி, விசாரணையை செப்.2-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.