

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல் குறித்து, சட்டப்பேரவைக்கு வெளியே கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி. உடன் திமுக எம்எல்ஏக்கள். | படம்: ம.பிரபு |
சென்னை: காவிரி, மேகேதாட்டு, விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்திருக்கிறோம். அப்போது, தைரியம் இருந்தால் சட்டப்பேரவையில் எழுந்து நின்று முதல்வர் பதில் சொல்லட்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பேரவைக்கு வெளியே எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் விதமாகவும், அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து அவைக்கு வந்துள்ளோம்.
இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையே பெயர் மாற்றி, புதிய திட்டங்களைப் போல அறிவித்துள்ளனர்.
இது பட்ஜெட் என்பதை விட, மரபுகளை மீறி அமைச்சர்கள் அனைவரும் முதல்வருக்கு ‘ஜால்ரா’ அடிக்கும் புகழுரை பட்ஜெட்டாகவே உள்ளது. இதில் உருப்படியாக எதுவும் இல்லை.
காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரம், விவசாயிகளின் பாதிப்புகள் குறித்து விவாதிக்க அவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர சட்டப்பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுத்துள்ளோம்.
இவை அனைத்தும் குறித்து சட்டப்பேரவையில் நாங்கள் கேள்வி எழுப்புவோம். தைரியம் இருந்தால் முதல்வர் எழுந்து நின்று அவையில் பதில் சொல்லட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்டாலின் கருத்து
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், ‘வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை பொழியப் பயன்பட்டதுதான் வேளாண் பட்ஜெட்.
மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது. திமுக அரசின் திட்டங்களின் மேல் ‘வெற்றி’ என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா? டெல்டா விவசாயிகளுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது'' என குறிப்பிட்டுள்ளார்.