

தன்னோடு இருந்த முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக மாற்றுக் கட்சிகளில் ஐக்கியம் ஆகிவிட்ட நிலையில், இன்னமும் ஓபிஎஸ் மவுன குருவாகவே இருப்பதால் அவர் பக்கம் மிஞ்சி இருக்கும் சொற்ப நிர்வாகிகளும் உச்சபட்ச விரக்தியில் உள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா தரப்பு தந்த நெருக்கடியால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓபிஎஸ், சசிகலாவுக்கு எதிராக ‘தர்மயுத்தம்’ தொடங்கினார். அப்போது அவருக்கு பக்கபலமாக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் ஆர்.விசுவநாதன், பெங்களூரு புகழேந்தி போன்ற பலரும் நின்றனர். இந்த நிலையில் ஊழல் வழக்கில் சிறை செல்லும் முன்பாக பழனிசாமியை முதல்வராக்கிவிட்டுச் சென்றார் சசிகலா.
சசிகலா தயவில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பழனிசாமி, ஓபிஎஸ்ஸை கூட்டு சேர்த்துக் கொண்டு சசிகலா வகையறாக்களை கட்சியை விட்டே ஓரங்கட்டினார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும் இணை ஒருங்கிணைப்பாளராகவும் முதலமைச் சராகவும் பழனிசாமியும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல் வலம் வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2021 சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கட்சிக்குள் ‘ஒற்றைத் தலைமை’ விவகாரம் பூதாகரமாக வெடித்ததால் ஓபிஎஸ்ஸையும் அவரது விசுவாசிகளையும் கட்சியை விட்டு நீக்கினார் பழனிசாமி. இதையடுத்து, பழனிசாமிக்கு எதிராக இரண்டாம் தர்மயுத்தத்தைத் தொடங்கினார் ஓபிஎஸ். இதற்கு நடுவே, கட்சியின் பொதுக்குழுவால் பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட பழனிசாமி, “இனி எந்தக் காலத்திலும் ஓபிஎஸ்ஸுக்கு அதிமுக-வில் இடமில்லை” என அறிவித்தார்.
இதனால், மீண்டும் அதிமுக-வுக்குள் என்ட்ரி ஆவதற்காக பாஜக-வின் தயவை நாடினார் ஓபிஎஸ். அவர்களும் இவரை வைத்து பழனிசாமியை வழிக்குக் கொண்டுவர சில பல சித்து வேலைகளைச் செய்து பார்த்தனர். எதுவும் எடுபடாத நிலையில், 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்காக பழனிசாமி தரப்புடன் கூட்டணி ஒப்பந்தம் செய்து கொண்டது பாஜக. ஓபிஎஸ், தினகரனை பழனிசாமி சேர்க்க மறுத்தாலும் தங்கள் கோட்டாவில் அவர்களுக்கு தொகுதிகளை ஒதுக்க பிளான் போட்டது பாஜக. முதலில் இதற்கும் முரண்டு பிடித்த பழனிசாமி, கடைசியில் தினகரனுக்கு மட்டும் ஓகே சொன்னார். ஓபிஎஸ்ஸுக்கு கேட்டைத் திறக்க மறுத்துவிட்டார்.
இடைப்பட்ட காலத்தில் ஓபிஎஸ் பக்கமிருந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், மருது அழகுராஜ் என ஒவ்வொருவராக திமுக-வில் ஐக்கியமானார்கள். கடைசியாக, அவரால் ராஜ்ய சபாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தர்மரும் அதிமுக-வில் இணைந்துவிட்டார். இத்தனை நடந்த பிறகும் இன்னமும் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார் ஓபிஎஸ். இதனால் அவரை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் வெல்லமண்டி நடராஜன் போன்ற ஒரு சில நிர்வாகிகளும் விரக்தியின் விளிம்பில் நிற்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஓபிஎஸ் தரப்பின் தென் மாவட்ட நிர்வாகி ஒருவர் “அதிமுக-வில் இணைவது அல்லது பாஜக-விடம் தனது, ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்துக்கு’ உள் ஒதுக்கீடு பெற்றுக் கொண்டு தனக்கும் தனது ஆதரவாளர்கள் ஒரு சிலருக்குமான சீட்களை உறுதிப்படுத்திக்கொள்வது என நினைத்தார் ஓபிஎஸ். ஆனால், பழனிசாமி அதற்கு தடையாக இருக்கிறார். இனியும் காத்திருந்து காலத்தைக் கடத்தாமல் விஜய்யுடன் ஓபிஎஸ் கூட்டணி அமைப்பது தான் புத்திசாலித்தனம்.
திமுக-வில் இணையலாம் என்றும் சிலர் அவருக்கு யோசனை சொல்கிறார்கள். அதிமுக-வில் மூன்று முறை முதல்வராக இருந்துவிட்டு திமுக-வில் இணைவது என்பது ஓபிஎஸ்ஸின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியதாக்கும். என்றாலும் எந்த முடிவாக இருந்தாலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக எடுங்கள். நாங்கள் எல்லாம் உங்கள் பக்கம் நிற்கிறோம் என்று சொல்கிறோம். ஆனாலும், அவர் என்ன நினைக்கிறார் என்பதை எங்களால் ஊகிக்க முடியவில்லை” என்றனர்.