சத்தமில்லாமல் புதுக்கட்சி தொடங்கிய ஓபிஎஸ்: டிச.23-ம் தேதி முறைப்படி அறிவிக்க திட்டம்

சத்தமில்லாமல் புதுக்கட்சி தொடங்கிய ஓபிஎஸ்: டிச.23-ம் தேதி முறைப்படி அறிவிக்க திட்டம்
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சத்தமில்லாமல் புதுக்கட்சி தொடங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அது குறித்து வரும் டிச.23-ம் தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து முறைப்படி அறிவிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்க பழனிசாமி தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், ஓபிஎஸ் தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக உரிமை மீட்புக்குழு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், "இதுவரை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவாக செயல்பட்டு கொண்டிருந்த அமைப்பு இனி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக செயல்படும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டிச.15-ம் தேதி மீண்டும் மாவட்ட செயலாளர்களை கூட்டி, முக்கிய முடிவெடுக்கப்படும் என்று அந்த கூட்டத்தில் ஓபிஎஸ் கூறியிருந்தார்.

அதன் பின்னர் டிசம்பர் மாத தொடக்கத்தில் ஓபிஎஸ் டெல்லி சென்ற நிலையில், கட்சியை பதிவு செய்ய சென்றதாக கூறப்பட்டது. ஏற்கெனவே அறிவித்த கூட்டத்தை ஓபிஎஸ் தள்ளிவைத்திருந்த நிலையில், ஓபிஎஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையின் லெட்டர் பேடில் ‘உரிமை மீட்பு குழு’ என்பதற்கு பதிலாக ‘உரிமை மீட்பு கழகம்’ என மாற்றப்பட்டுள்ளது. முகவரியும் பசுமை வழிச்சாலைக்கு பதிலாக, நந்தனம் முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் ஓபிஎஸ் சத்தமின்றி புதுக்கட்சியை தொடங்கிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது.

மேலும் ஓபிஎஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் டிச.23-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அல்லது அடுத்த நாள் வரும் எம்ஜிஆர் நினைவு தினத்தில் முறைப்படி புதுக்கட்சியை அறிவிக்க ஓபிஎஸ் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் கேட்டபோது, "கட்சி ஒன்றிணைப்புக்கு பழனிசாமி முட்டுக்கட்டையாக உள்ளார். தேர்தல் நெருங்கி வருகிறது. தன்னை நம்பி வந்தவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய கடமை ஓபிஎஸ்ஸூக்கு இருக்கிறது.

அதனால் விரைந்து ஒரு முடிவை எடுக்க வேண்டியுள்ளது. எனவே, முந்தைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் குழுவானது, கழகமாக மாறியுள்ளது. அது தொடர்பாக டிச.23-ம் தேதி நிர்வாகிகளுடன் விவாதித்து ஓபிஎஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார்" என்றனர்.

சத்தமில்லாமல் புதுக்கட்சி தொடங்கிய ஓபிஎஸ்: டிச.23-ம் தேதி முறைப்படி அறிவிக்க திட்டம்
“தவெகவுக்கு வழங்கப்படும் சின்னம் 15 நிமிடத்தில் உலகப் புகழ் பெறும்” - புஸ்ஸி ஆனந்த் சஸ்பென்ஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in