சென்னை: ஜிஎஸ்டி குறைப்புக்கு பிந்தைய ஆவின் பால் பொருட்கள் விலையைக் குறைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கப்பட்ட முடிவின்படி நெய், வெண்ணெய், பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும், ஐஸ்க்ரீம் வகைகள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும் செப்.22-ம் தேதிமுதல் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழக அரசால் நடத்தப்படும் ஆவின் நிறுவன பால் பொருட்கள் விலை குறைக்கப்படவில்லை. திமுக அரசின் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பால் நிறுவனங்கள் வரி குறைப்பின் பலனை மக்களுக்கு அளித்துள்ள நிலையில், ஆவின் நிறுவனம் மட்டும் புதிய விலைப் பட்டியலை வெளியிடவில்லை.
மாறாக நவ.30-ம் தேதி வரை பண்டிகைக் கால தள்ளுபடி வழங்குவதாக அறிவித்து, டிசம்பர் 1-ம் தேதிமுதல் ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு முன் இருந்த அதே விலையை மீண்டும் ஆவின் நிறுவனம் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய மாநில அரசே ஜிஎஸ்டி குறைப்பின் பயனை மக்களுக்கு அளிக்காமல் இருக்கும் செயல் வழிப்பறிக் கொள்ளைக்குச் சமம், சட்டத்துக்கு புறம்பானது.
எனவே முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, ஆவின் பால் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைப்பின் பலனை பொதுமக்களுக்கு அளிக்கும் வகையில், ஜிஎஸ்டி குறைப்புக்கு பிந்தைய விலையை உடனடியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.