

சென்னை: அங்கீகரிக்கப்பட்ட தரமான ஓஆர்எஸ் கரைசல்களையே விற்பனை செய்ய வேண்டும் என மருந்து கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் உச்சத்தை எட்டியுள்ளது. கடும் வெப்பத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர். வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் உடல் நீர்ச்சத்து இழப்பை சமன் செய்ய அனைத்து வயதினரும் பரிந்துரைக்கப்பட்ட அளவில் ஓஆர்எஸ் கரைசல்களை பரவலாக எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்மூலம் கோடை கால பாதிப்புகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம். பொதுமக்களுக்கு தரமான ஓஆர்எஸ் கரைசல்களை விற்பனை செய்வது தொடர்பாக மருந்துக் கடைகள் உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
அதன்படி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற பாதிப்புகளால் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும்போது, உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரமான ஓஆர்எஸ் கரைசல்களை மட்டுமே மருந்துக் கடை உரிமையாளர்கள் விற்பனை செய்ய வேண்டும். குறிப்பாக, ஓஆர்எஸ் தயாரிப்புகளின் பேக்கிங்கில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் பேட்ச் எண் ஆகியவை கட்டாயம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
அதேபோல், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஓஆர்எஸ்எல், ஓஆர்எஸ்எல் பிளஸ் மற்றும் ஓஆர்எஸ் ஃபிட் போன்ற பெயர்களில் கிடைக்கும் பானங்கள், பழச்சாறு அடிப்படையில் தயாரிக்கப்படுபவை என்பதை விற்பனையாளர்கள் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இதுதவிர, உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றதாக போலியாக கூறி தரமற்ற கரைசல்களை விற்பனை செய்யும் மருந்துக் கடைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.