

டீசல் விலை உயர்வால் லோடு கிடைக்காமல், சேலம் செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகள். படம் : எஸ்.குரு பிரசாத்
சேலம்: தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையிலான லாரிகள், போக்குவரத்து இன்றி முடங்கி உள்ளதாக லாரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் போர் காரணமாக, நாடு முழுவதும் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக, தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிக எண்ணிக்கையிலான லாரிகள், போக்குவரத்து இன்றி முடங்கி நிற்பதாக லாரி உரிமையாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் தனராஜ் தெரிவித்ததாவது: கடந்த சில மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு வந்தது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.8-க்கும் மேல் உயர்ந்துவிட்டது. டீசல் விலை உயர்வால் லாரிகளுக்கான வாடகை 25 சதவீதம் வரை உயர்த்த வேண்டியதானது.
ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் டயர், வாகன உதிரி பாகங்கள், காப்பீடு கட்டணம், சுங்கக்கட்டணம் ஆகியவை உயர்ந்தபோதும் லாரி வாடகை உயர்த்தப்படவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. இந்நிலையில், அமெரிக்கா- ஈரான் போரைத் தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு, தற்போது டீசல் விலை லிட்டருக்கு ரூ.8-க்கும் மேல் உயர்த்தப்பட்டதால் லாரிகளுக்கான வாடகை 25 சதவீதம் உயர்ந்துவிட்டது.
தமிழகத்தில் கனரக லாரிகள் 6.50 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் இருக்கும் நிலையில், டீசல் விலை உயர்வினால், 1 லட்சத்துக்கும் அதிகமான லாரிகள், லோடு கிடைக்காமல் முடங்கிவிட்டன. சேலத்தில் இருந்து ஜவ்வரிசி, ஸ்டோன் பவுடர், தேங்காய், சர்க்கரை உட்பட பல்வேறு பொருட்கள், லாரிகளில் கொண்டு செல்வது பாதிக்கப்பட்டுள்ளது.
லாரி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள கோடிக்கணக்கானோர், பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது, அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.