

சென்னை: மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 543 என்பதே 25 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, பிரதமர் மோடி அளித்த கறுப்புப் பணம் ஒழிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜகவை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்.
1971 மக்கள் தொகை அடிப்படையில் அமைக்கப்பட்ட 543 மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையே மேலும் 25 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும்.
2018 முதல் 2024 வரை கார்ப்பரேட்கள் வழங்கிய மொத்த தேர்தல் பத்திர நன்கொடையான ரூ.16,518 கோடியில், பாஜக மட்டும் ரூ.8,252 கோடி (50%) பெற்றுள்ளது.
கார்ப்பரேட்களுக்கு சலுகை செய்து பெற்ற இந்த நிதி ஊழல் இல்லையா என்பதை பாஜக விளக்க வேண்டும். காவிரி உரிமையை நிலைநாட்டவும், மேகேதாட்டுவில் அணை கட்டுவதைத் தடுக்கவும் தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் காங்கிரஸ் துணை நிற்கும்.
கடந்த 60 ஆண்டுகளாக திராவிட இயக்கங்களின் புரையோடிப்போன ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் தவெக தலைவர் விஜய் எடுத்த முயற்சிக்கு 27 மாதங்களில் பலன் கிடைத்து திமுக ஆட்சி அகற்றப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தை இக்கூட்டம் நெஞ்சார வரவேற்கிறது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேசிய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் பேசியபோது, “தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி அமையகாங்கிரஸ் துணை நிற்பதில் மகிழ்ச்சி.
யாருடைய முதுகிலும் நாங்கள் குத்தவில்லை.ராகுல் காந்தி 2029-ல் பிரதமராக பதவியேற்பது உறுதி” என்றார். மாணிக்கம் தாகூர் பேசும்போது, “காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி அவசியம்தான். ஆனால் அது கட்சியின் சுய அடையாளத்தை அழிப்பதாக இருக்கக்கூடாது.
தற்போது தமிழகத்தில் 5-வது இடத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை, அடுத்த 24 மாதங்களுக்குள் 3-வது பெரிய அரசியல் சக்தியாக மாற்ற தொண்டர்கள் தீவிரமாக உழைக்க வேண்டும்” என்றார்.