ரோடு ஷோ விவகாரம்: நெறிமுறைகளை வெளியிடாததால் தலைமைச் செயலர், டிஜிபிக்கு வழக்கறிஞர் நோட்டீஸ்!

ரோடு ஷோ விவகாரம்:  நெறிமுறைகளை வெளியிடாததால் தலைமைச் செயலர், டிஜிபிக்கு வழக்கறிஞர் நோட்டீஸ்!
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோ–க்கள் தொடர்பான இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடாததை அடுத்து, தமிழக தலைமைச் செயலர், உள்துறை செயலர், டிஜிபிக்கு, வழக்கறிஞர் சூரியபிரகாசம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கரூரில் செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கும், பொதுக் கூட்டங்களுக்கும் வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கோரி தவெக, அதிமுக மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சிகளும், மதுரையைச் சேர்ந்த திருக்குமரன், பிரகாஷ் உள்ளிட்ட தனிநபர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 23 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், 40-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் கருத்துகளைப் பெற்று, பொதுக் கூட்டங்கள், ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது தமிழக அரசு.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அதிமுக, தவெக மற்றும் தேசிய மக்கள் சக்திக் கட்சி சார்பில் ஆலோசனைகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள் பரிசீலிக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக அரசியல் கட்சிகள் அளித்த ஆலோசனைகளை பரிசீலித்து, ஜனவரி 5 ம் தேதிக்குள் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில், ஜனவரி 5-ம் தேதி வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்காதது, நீதிமன்ற அவமதிப்பு செயல் என தேசிய மக்கள் சக்திக் கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சூரியபிரகாசம், தமிழக தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் மற்றும் டிஜிபி-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ரோடு ஷோக்கள் நடத்துவதை தடுக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்படவில்லை. அதனால் தமிழக தலைமைச் செயலர், உள்துறை செயலர் மற்றும் டிஜிபி-க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, தலைமை நீதிபதி அமர்வில் நாளை முறையிட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோடு ஷோ விவகாரம்:  நெறிமுறைகளை வெளியிடாததால் தலைமைச் செயலர், டிஜிபிக்கு வழக்கறிஞர் நோட்டீஸ்!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம்: தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து ஐகோர்ட் தீர்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in