நார்வே செஸ் 2026 வெற்றி: பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை

கிராண்ட் மாஸ்டருடன் செஸ் விளையாடிய முதல்வர் விஜய்
நார்வே செஸ் 2026 வெற்றி: பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை
Updated on
2 min read

சென்னை: நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ஊக்கத்தொகை ரூ.50 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் விஜய் வழங்கினார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,“தமிழக முதல்வர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தாவுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உயரிய ஊக்கத் தொகையான 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

அப்போது, கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா நார்வே செஸ் 2026 தொடரில் வெற்றி பெற்றதற்காக வழங்கப்பட்ட கோப்பையைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக உருவாக்கிடும் வகையில், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், பதக்கங்களை வெல்பவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில், செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (ELITE) கீழ் ஆண்டுதோறும் 30 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டுவருகிறது.

முதல்வர் தலைமையின் கீழ், தமிழ்நாடு அரசு, விளையாட்டை ஒரு சக்திவாய்ந்த சமூக மாற்றக் கருவியாகக் கருதி செயலாற்றி வருகிறது. இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமான வழியில் செலுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்து, சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதே அரசின் தலையாய நோக்கமாகும். தூய்மையான, நேர்மையான மற்றும் அறநெறி சார்ந்த விளையாட்டுக் கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதில் தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது.

அதனைச் செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் “ஹோம் ஆஃப் செஸ்” என்ற தனிப்பட்ட சதுரங்க அகாடமி நிறுவப்பட்டுள்ளது. இந்த அகாடமியின் மூலம் முறைப்படி பயிற்சி முகாம்களை நடத்துதல், வீரர்களின் செயல்திறனைக் கண்காணித்தல், சர்வதேச அளவிலான அனுபவத்தை வழங்குதல், நவீன கருவிகள் மற்றும் ஒத்திகை மென்பொருள்களின் மூலம் மேம்பட்ட பயிற்சி அளித்தல் போன்றவை வழங்கப்படுகிறது.

அத்துடன், மனவளப்பயிற்சி, முறையான திட்டமிடல் மற்றும் வீரர்களின் முழுமையான அறிவுத்திறன் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சி அனைத்து வயதினரையும், குறிப்பாக இளம் வீரர்களை ஊக்குவித்து, சர்வதேச மாஸ்டர் (IM) மற்றும் கிராண்ட்மாஸ்டர் (GM) போன்ற உயரிய சதுரங்கப் பட்டங்களைப் பெற வழிவகை செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நார்வே செஸ் 2026 வெற்றி: பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை
‘ராமர் கோயில் நிதியில் மோசடி!’ - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in