

சென்னை: “தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் கொள்கை திட்டமோ, முயற்சியோ இல்லை” என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் அரசியல் சூழ்நிலை கருதி, அரசியல் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் குறுக்கீடுகள் ஏற்படாமல் இருக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதிய அரசுக்கு ஆதரவு அளித்ததற்கு தமிழ் மாநிலக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்தச் சூழலில் அரசின் செயல்பாட்டின் மீதான அணுகுமுறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறை இருக்கும்.
தமிழகத்தில் திமுக, மதச்சார்பற்ற கூட்டணி தோல்வி அடைந்திருந்தாலும், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் நலத் திட்டங்கள் தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டன. அத்தகைய நலத் திட்டங்கள் தொடர வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். புதிய திட்டங்களையும் வரவேற்போம்.
உழைக்கும் மக்களின் பல்வேறு கோரிக்கைகள் கிடப்பில் உள்ளன. கல்வியாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளை புதிய அரசு செவிமடுத்து நிறைவேற்றித்தர வேண்டும் என வலியுறுத்துவோம்.
தமிழக அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறும் கொள்கை திட்டமோ, முயற்சியோ இல்லை. குதிரை பேரம் பற்றி அறியாதவர்கள் கம்யூனிஸ்டுகள், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கூறியிருந்தாலும், அத்தகைய சிந்தனையில் எங்கள் கட்சி ஈடுபடாது. குதிரை பேரம் தொடர்பாக வழக்கு தொடரும் நிலை ஏற்பட்டால், சட்டம் தனது கடமையை செய்யட்டும்” என்று அவர் கூறினார்.